search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் 2 கல்லூரி மாணவிகள் காதலர்களுடன் தஞ்சம்
    X

    வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் 2 கல்லூரி மாணவிகள் காதலர்களுடன் தஞ்சம்

    வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் 2 காதல் ஜோடிகள் தஞ்சமடைந்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள பச்சூர் கவுண்டர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் மயில்வாணன். இவருடைய மகள் ஜெயஸ்ரீ (வயது 20). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. இறுதியாண்டு படிக்கிறார். ஜெயஸ்ரீயும் வாணியம்பாடி பழைய பேட்டை பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் மயில்வாணன் (22) என்கிற வாலிபரும் 2 ஆண்டுகளாக காதலித்தனர்.

    மயில்வாணன், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜெயஸ்ரீக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.

    இதையடுத்து, ஒடிசாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த மயில்வாணன் காதலி ஜெயஸ்ரீயை எதிர்ப்பை மீறி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஐகொந்தம் கொத்தப் பள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் சாமி கோவிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார்.

    இதையடுத்து, பாதுகாப்பு கேட்டு மயில்வாணன் தனது காதல் மனைவி ஜெயஸ்ரீயுடன் வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று தஞ்சமடைந்தார்.

    குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (21). இவர், ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2 ஆண்டுகளாக ராணு வீரராக பணியாற்றி வருகிறார். சதீஷூம், அதே பகுதியை சேர்ந்த ஜோதிகா (18) என்ற இளம்பெண்ணும் காதலித்தனர்.

    ஜோதிகா, குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதையடுத்து, விடுமுறை எடுத்து கொண்டு ஊருக்கு வந்த ராணுவ வீரர் சதீஷ், ஜோதிகாவை வெளியே அழைத்துச் சென்று வேலூர் அருகே அரியூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

    பிறகு, பாதுகாப்பு கேட்டு வேலூர் எஸ்.பி. அலுவல கத்தில் தஞ்சமடைந்தனர்.

    போலீசார், 2 காதல் ஜோடிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று ஒரே நாளில் ஒரே நேரத்தில் 2 காதல் ஜோடிகள் தஞ்சமடைந்ததால் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு காணப்பட்டது.
    Next Story
    ×