search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனாதையாக கிடந்த குழந்தைக்கு சுதந்திரம் என்று பெயர் சூட்டிய நடிகை
    X

    அனாதையாக கிடந்த குழந்தைக்கு சுதந்திரம் என்று பெயர் சூட்டிய நடிகை

    சென்னை வளசரவாக்கத்தில் மழைநீர் கால்வாயில் அனாதையாக கிடந்த குழந்தையை மீட்ட நடிகை அக்குழந்தைக்கு சுதந்திரம் என்று பெயர் சூட்டினார். #Suthanthiram
    போரூர்:

    வளசரவாக்கம் எஸ்.வி. எஸ். நகர் 6-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள தரைதள வீட்டில் சின்னத்திரை நடிகையான கீதா வசித்து வருகிறார்.

    நேற்று காலை குடியிருப்பு முன்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தை அழுதபடி கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    குழந்தை கிடந்த கால்வாயின் மேற்பகுதி சிமெண்ட் சிலாப்பால் மூடப்பட்டு இருந்தது. இதனால் குழந்தையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. சின்னத்திரை நடிகை கீதா தரையில் படித்தபடி அங்கு இருந்த ஆண் குழந்தையை மீட்டார்.


    குழந்தையின் கழுத்தில் அதன் தொப்புள் கொடி சுற்றியபடி காணப்பட்டது. பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை பெற்றோர் வீசி சென்றிருப்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து குழந்தையை நடிகை கீதா வெந்நீரில் குளிப்பாட்டி முதலுதவி செய்தார். இதுபற்றி அறிந்ததும் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.

    சுதந்திர தினத்தில் குழந்தை மீட்கப்பட்டதால் அதற்கு ‘சுதந்திரம்’ என்று நடிகை கீதாவும், பொதுமக்களும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

    தற்போது அந்த குழந்தை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தை நலமாக இருக்கிறது.

    நேற்று மாலை குழந்தையின் உடல்நிலை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று கேட்டறிந்தார்.

    குழந்தை வீசப்பட்ட கால்வாய் அருகே உள்ள வீட்டில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அதனை வளசரவாக்கம் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், குழந்தை வீசப்படும் நேரத்தில் பெரிய வேன் ஒன்று கால்வாயை மறைத்தப்படி வந்து நிற்கிறது.


    சிறிது நேரத்தில் அந்த வேன் சென்ற பிறகே அங்கு குழந்தை வீசப்பட்டிருப்பது தெரிந்தது. எனவே குழந்தையை வீசுவதற்காகவே கேமராவை மறைத்து வேன் நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த வேன் குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

    மேலும் குழந்தையின் பெற்றோர் யார்? எதற்காக குழந்தையை வீசினர். கடத்தப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை குழந்தையின் பெற்றோர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. #Suthanthiram
    Next Story
    ×