search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை, குமரியில் பலத்த மழை: தண்டவாளத்தில் மண்சரிந்ததால் ரெயில்கள் ரத்து - பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
    X

    நெல்லை, குமரியில் பலத்த மழை: தண்டவாளத்தில் மண்சரிந்ததால் ரெயில்கள் ரத்து - பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

    நெல்லை, குமரி மாவட்டங்களில் பலத்த மழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிந்தது. இதனால் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மழை காரணமாக குமரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. #HeavyRain
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. நேற்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக பாபநாசம், சேர்வலாறு, ராமநதி, கடனாநதி ஆகிய அணைகளுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 124 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 137 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 13 அடி உயர்ந்தது.



    அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமிர பரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரையோர பகுதியில் உள்ள பல மரங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

    நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கருப்பந்துறை ஆற்றுப்பாலத்தை தொடும் அளவுக்கு தண்ணீர் ஓடுகிறது. குறுக்குத்துறை தாம்போதி பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.



    தொடர் மழை காரணமாக, குண்டாறு, அடவிநயினார், கொடுமுடியாறு ஆகிய அணைகள் நிரம்பி உள்ளன. கருப்பாநதி, கடனாநதி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன.

    குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க நேற்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு அதிகரித்தது.

    இந்த நிலையில் புலியருவியில் குளித்தபோது வெள்ளத்தில் சிக்கி சிவகாசியை சேர்ந்த பிரபு (வயது 39) என்ற சுற்றுலா பயணி இறந்தார்.

    செங்கோட்டை அருகே கேரள மாநிலம் தென்மலையில் பலத்த மழை பெய்தது. நேற்று அதிகாலையில் திடீரென தென்மலை ரெயில் குகை நுழைவுவாயிலில் ராட்சத பாறை விழுந்து குகை பாதையை மூடிவிட்டது. மேலும் அப்பகுதியில் இருபுறமும் மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் விழுந்தது.

    தண்டவாளத்தில் விழுந்து கிடக்கும் பாறை மற்றும் மண்சரிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் நேற்று காலை நெல்லையில் இருந்து செங்கோட்டை வழியாக கொல்லம் செல்லும் ரெயில் ரத்து செய்யப்பட்டது. மேலும் நெல்லையில் இருந்து செங்கோட்டை வழியாக இரவு 12.30 மணிக்கு பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலும் ரத்தானது.

    இதேபோல் குமரி மாவட்டத்திலும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் இரணியல் ரெயில் நிலையம் அருகில் நேற்று அதிகாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக குருவாயூரில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டது.

    பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு தண்டவாளத்தில் கிடந்த மண்ணை அப்புறப்படுத்தும் பணி நடந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், அதிக அளவில் மண் மூடி இருந்ததாலும் சீரமைப்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. மண் சரிவு காரணமாக பல ரெயில்கள் நடு வழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    நாகர்கோவிலில் இருந்து புறப்படவேண்டிய 9 ரெயில் கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை-கொல்லம் செல்ல வேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ், திருச்சி- திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாகர்கோவில் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன.

    நெடுந்தூர பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் பொருட்டு மாற்று ஏற்பாடாக, கொல்லம்- சென்னை இடையேயான அனந்தபுரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்- திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆகியவை நேற்று மாலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றன. கன்னியாகுமரி-மும்பை எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது.

    தொடர்மழை காரணமாக குமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் நெல்லை மாவட்டத்தில் தென்காசி வட்டார பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×