search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீ முஷ்ணம் அருகே பெண்ணை கட்டி போட்டு நகை கொள்ளை
    X

    ஸ்ரீ முஷ்ணம் அருகே பெண்ணை கட்டி போட்டு நகை கொள்ளை

    ஸ்ரீமுஷ்ணம் அருகே பெண்ணை கட்டி போட்டு மர்ம மனிதர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே உள்ள மேல வன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 81) இவரது மனைவி சரோஜா (71). இவர்கள் 2 பேரும் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர்.

    ராஜகோபால் காற்றுக்காக வீட்டின் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு வெளியில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அவரின் மனைவி சரோஜா வீட்டுக்குள் தூங்கி கொண்டிருந்தார்.

    இதை நோட்டமிட்ட 4 மர்ம மனிதர்கள் நேற்று நள்ளிரவில் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சரோஜாவின் கழுத்தில் கிடந்த 6½ பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார்.

    அப்போது திடுக்கிட்டு எழுந்த சரோஜா திருடன்.... திருடன்... என அலறினார். உடனே அந்த மர்ம மனிதர்கள் கத்தியை காட்டி சரோஜாவை மிரட்டினர்.

    பின்னர் அவர் வாயில் துணியை வைத்து சரோஜாவின் கைகளை கயிற்றினால் கட்டி போட்டு விட்டு கழுத்தில் கிடந்த 6½ பவுன் தங்க சங்கலியை பறித்து கொண்டு மர்ம மனிதர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.

    அப்போது வீட்டின் முன்பு தூங்கி கொண்டிருந்த ராஜகோபால் திடீரென கண் விழித்தார். வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது மர்ம மனிதர்கள் 4 பேர் வீட்டிலிருந்து வெளியே சென்று கொண்டிருந்தனர். உடனே ராஜகோபால் அந்த மர்ம மனிதர்களை பிடிக்க முயன்றார்.

    அப்போது மர்ம மனிதர்களில் ஒருவன் அங்கு கிடந்த உருட்டு கட்டையை எடுத்து ராஜகோபாலை சரமாரியாக தாக்கினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இதில் ராஜகோபால் வலி தாங்க முடியாமல் அலறினார். அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் தப்பி ஓடிய மர்ம மனிதர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. தப்பி ஓடி விட்டனர்.

    பின்னர் அந்த பகுதி பொதுமக்கள் வீட்டில் கட்டி போட்டிருந்த சரோஜாவையும் தாக்குதலில் காயம் அடைந்த ராஜகோபாலையும் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற நகையின் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும்.

    இது குறித்து குமராட்சி போலீசில் ராஜகோபால் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×