search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தட்டாஞ்சாவடியில் 2 வாலிபர்களை கத்தியால் குத்திய கல்லூரி பேராசிரியர்-என்ஜினீயர் கைது
    X

    தட்டாஞ்சாவடியில் 2 வாலிபர்களை கத்தியால் குத்திய கல்லூரி பேராசிரியர்-என்ஜினீயர் கைது

    தட்டாஞ்சாவடியில் 2 பேரை கத்தியால் குத்திய கல்லூரி பேராசிரியர் மற்றும் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (வயது37), நேற்று முன்தினம் இரவு இவரும் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரான குமார் என்பவரும் கோரிமேடு பட்டானூர் சுங்கச்சாவடி மையம் அருகே மதுஅருந்தி நண்பர் பிறந்த தினவிழாவை கொண்டாடினர். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

    உற்சாக மிகுதியில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வளைந்து வளைந்து வந்தனர். தட்டாஞ்சாவடி பகுதியில் இதுபோன்று வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த தனியார் கல்லூரி பேராசிரியர் நைனார்மண்டபம் மூகாம்பிகை நகரை சேர்ந்த ஹேமச்சந்திரன் மற்றும் கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த இவரது நண்பரான சாப்ட்வேர் என்ஜினீயர் வினோத்குமார் (32) ஆகியோர் தட்டிக்கேட்டனர்.

    இதில் இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த ஹேமச்சந்திரன் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த கத்தியை எடுத்து தட்சிணாமூர்த்தியையும், குமாரையும் குத்தினார். மேலும் வினோத்குமார் அவர்களை கையால் தாக்கினார்.

    இதில் காயம் அடைந்த தட்சிணாமூர்த்தி, குமார் ஆகிய இருவரும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் தட்சிணாமூர்த்தி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். குமார் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து கல்லூரி பேராசிரியரான ஹேமச்சந்திரன் மற்றும் என்ஜினீயர் வினோத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×