என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீமுஷ்ணம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 4 வாலிபர்கள் கைது
    X

    ஸ்ரீமுஷ்ணம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 4 வாலிபர்கள் கைது

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து செய்தனர். இவர்கள் திருடிய 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு நடைபெறுவதாக ஸ்ரீ முஷ்ணம் போலீஸ் நிலையத்திற்கு தொடர் புகார்கள் வந்தது.

    இதையடுத்து சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் நேற்று ஸ்ரீ முஷ்ணம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆண்டி மடம் செல்லும் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் 4 பேரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

    இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் நான்கு பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரனை நடத்தினர்.

    அப்போது அவர்கள் ஸ்ரீமுஷ்ணம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அரசு (வயது19), ரஞ்சித்(17), சின்னையா என்கிற ராஜ்குமார்(18), ஸ்ரீ ஆதிவராகநல்லூர் பகுதியை சேர்ந்த சபரி வாசன்(17) என்பதும் இவர்கள் 4 பேரும் சேர்ந்து ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.

    அவ்வாறு திருடிய மோட்டார் சைக்கிள்களை ஆண்டிமடம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி வைத்திருந்துஅதன் பின்னர் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    மேலும் இவர்கள் 4 பேரும் சேர்ந்து ஸ்ரீ முஷ்ணம் பகுதியில் உள்ள துரைசாமி என்பவருக்கு சொந்தமான பெட்டிகடையை உடைத்து பொருட்களை திருடியதையும் ஒப்பு கொண்டனர்.

    இவர்கள் 4 பேரும் திருடுவதற்கு மூளையாக செயல்பட்டவர் அய்யூர் பகுதியை சேர்ந்த மற்றொரு ரஞ்சித் என்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அரசு (வயது19), ரஞ்சித்(17), சின்னையா என்கிற ராஜ்குமார்(18), சபரி வாசன்(17) ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இவர்கள் திருடிய 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அய்யூர் பகுதியை சேர்ந்த மற்றொரு ரஞ்சித்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×