search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய திங்கட்கிழமை வரை அவகாசம் வழங்கியது ஐகோர்ட்
    X

    உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய திங்கட்கிழமை வரை அவகாசம் வழங்கியது ஐகோர்ட்

    உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அட்டவணையை தாக்கல் செய்வதற்கு திங்கட்கிழமை வரை தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கி உள்ளது. #TNLocalBodyElection #TamilNaduCivicPolls
    சென்னை:

    தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016-ம்ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற இருந்தது.

    இந்த தேர்தலில், எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பே, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டவிதிகளுக்கு உட்பட்டு பிறப்பிக்கப்படவில்லை. எனவே, இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்கிறேன் என்று அதிரடி உத்தரவை வெளியிட்டார்.

    மேலும் சட்டவிதிகளை பின்பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டு, 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந்தேதி இந்த உத்தரவு வெளியானது.



    இதை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் விசாரித்தது.

    உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.

    சுப்ரீம் கோர்ட்டும், உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தது. மேலும், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

    இதன்பின்னரும், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்படவில்லை. இதனால் உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தாமதம் ஆனது. இதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது.

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ் கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் மீது தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி, சென்னை ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வில் நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், “உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்?” என்று நீதிபதிகள் கேட்டனர்.

    இதற்கு, “தொகுதி வரையறை பணி முடிந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்” என்று தேர்தல் ஆணையம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

    இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை முதல் வழக்காக இந்த வழக்கை எடுத்து தீர்ப்பை பிறப்பிக்க பட்டியலிடப்பட்டது.

    தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் இந்த வழக்கை எடுத்து விசாரித்தனர். அப்போது அவர்கள், ‘உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை எதுவும் விதித்துள்ளதா?’ என்று கேள்வி கேட்டனர்.

    அதற்கு தி.மு.க. சார்பில் ஆஜராகிய மூத்த வக்கீல் பி.வில்சன் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு எந்தவித தடையும் விதிக்கவில்லை. மாறாக தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்றுதான் சுப்ரீம்கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், வேண்டுமென்றே, உள்நோக்கத்துடன், உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், தமிழக அரசும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும் இழுத்தடிக்கிறது.

    எனவே, ஐகோர்ட்டு உத்தரவை மதிக்காமல், அவமதிக்கும் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கானையும், செயலாளர் ராஜசேகரையும் கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் சிறை தண்டனை வழங்கி, அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    தி.மு.க. வக்கீலின் இந்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையத்தின் வக்கீல் நெடுஞ்செழியன் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    சுப்ரீம்கோர்ட்டில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை.

    இந்த வழக்கில், மூத்த வக்கீல் ஆஜராக உள்ளார். எனவே இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றார். அதற்கு நீதிபதிகள், இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என்று நிராகரித்தனர்.

    அதன் பிறகு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக சில உத்தரவுகளை பிறப்பித்தனர். அதன் விவரம் வருமாறு:-

    தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு பல மாதங்களாகி விட்டது. ஆனால், தேர்தலை நடத்துவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    சுப்ரீம் கோர்ட்டிலும் தடை எதுவும் விதிக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது, தேர்தலை நடத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இந்த செயல் கோர்ட்டை அவமதிக்கும் விதமாக உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    அப்போது குறுக்கிட்ட மூத்த வக்கீல் வில்சன், ‘சுப்ரீம் கோர்ட்டில் தொகுதி மறுவரையறை செய்வது தொடர்பான வழக்கு மட்டும் தான் நிலுவையில் உள்ளது. அதனால், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மீண்டும் வலியுறுத்தினார்.

    இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை சிறிது நேரத்துக்கு தள்ளி வைத்தனர். பிறகு உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர்.

    வருகிற 6-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். இல்லையெனில் அது கோர்ட்டை அவமதிப்பதாக கருதப்படும் என்று உத்தரவிட்டனர்.

    பிறகு இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்டு 6-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். #TNLocalBodyElection #TamilNaduCivicPolls
    Next Story
    ×