search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரியல் எஸ்டேட் அதிபர் கொலை: ரவுடி தாதாமணிகண்டன் கூட்டாளிகள் 2 பேர் சிக்கினர்
    X

    ரியல் எஸ்டேட் அதிபர் கொலை: ரவுடி தாதாமணிகண்டன் கூட்டாளிகள் 2 பேர் சிக்கினர்

    விழுப்புரம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் ரவுடி தாதாமணிகண்டன் கூட்டாளிகள் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் பாபு என்ற கோதண்டராமன் (வயது 42), ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த 21-ந் தேதி மாலை பாபு, மோட்டார் சைக்கிளில் ஆரோவில் பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    குயிலாப்பாளையம் அய்யனார்கோவில் அருகே வந்தபோது பின்னால் காரில் வேகமாக வந்த ஒரு கும்பல், மோட்டார் சைக்கிளை வழி மறித்து, நாட்டு வெடிகுண்டை எடுத்து பாபுவை நோக்கி வீசினர். இதில் நிலைகுலைந்த பாபுவை அந்த கும்பல் சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு காரில் தப்பிச்சென்றனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரோவில் போலீசார் விரைந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்தகொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பாபு தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. குயிலாப்பாளையத்தில் ரவுடிகள் ராஜ்குமார் தலைமையில் ஒரு கும்பலாகவும், தாதாமணிகண்டன் தலைமையில் மற்றொரு கும்பலாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதில் பாபு, ரவுடி ராஜ்குமார் தரப்பை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பாபுவை கொலை செய்தது தாதாமணிகண்டனின் கூட்டாளிகளான குயிலாப்பாளையத்தை சேர்ந்த அருள், பச்சியப்பன், வீரமணி மற்றும் புதுவை கருவடிக்குப்பத்தை சேர்ந்த கவாஸ்கர், பெரிய முதலியார் சாவடியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் ஆகியோர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடிவந்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு கவாஷ்கர், ஜெகதீஸ் வரனை போலீசார் பிடித்தனர். அவர்கள் இருவரையும் வானூர் போலீஸ்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×