search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய சொத்து வரி மூலம் ரூ.1,160 கோடி கிடைக்கும்
    X

    புதிய சொத்து வரி மூலம் ரூ.1,160 கோடி கிடைக்கும்

    தமிழ்நாட்டில் சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளதால் சென்னை மாநகராட்சிக்கு 1 ஆண்டுக்கு ரூ.1,160 கோடி கூடுதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ChennaiCorporation
    சென்னை:

    தமிழ்நாட்டில் சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளதால் ஒவ்வொரு வீட்டுக்கும் எவ்வளவுவரி உயரும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 12 லட்சம் வீடுகள் உள்ளன. இதில் 10 லட்சத்து 50 ஆயிரம் பேர் சொந்த வீட்டுக்காரர்கள். 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வாடகை வீடு வைத்துள்ளதாக புள்ளி விவரம் உள்ளது.

    தற்போது சொந்த வீடுகளுக்கு 50 சதவீதம் வீட்டு வரி உயரும் போது ஒவ்வொரு அரையாண்டுக்கும் ரூ.180 கோடி அதிகம் வரி கிடைக்கும். வாடகை வீடுகளுக்கு வரி உயர்வதன் மூலம் ரூ.400 கோடி அதிகம் வரி கிடைக்கும்.

    இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு 1 ஆண்டுக்கு ரூ.1,160 கோடி கூடுதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னையில் வாடகைக்கு பல வீடுகள் விடப்பட்டிருந்தாலும் அதை சொந்த வீடுகளாகவே உரிமையாளர்கள் கணக்கு காட்டி வருவதாகவும் இதனால் மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    எனவே ஒவ்வொரு வீட்டுக்கும் வரி மறுமதிப்பீடு செய்ய கைடு லைன் மதிப்புப்படி (நிலத்துக்கான அரசின் வழி காட்டிமதிப்பு) புதிதாக வரி விதிக்க முடிவு செய்துள்ளனர்.

    இதற்காக ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் விண்ணப்ப பாரம் பெற்று அதில் கேட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

    எத்தனை சதுர அடியில் வீடு உள்ளது. அது மாடி வீடா, அல்லது கீழ்தளம் மட்டும் உள்ளதா? வாடகைக்கு எத்தனை வீடு விடப்பட்டுள்ளது என்ற விவரத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதற்கேற்ப வீட்டு வரி விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    1998-ம் ஆண்டுக்கு பிறகு வீட்டு வரி உயர்த்தப்படவில்லை என்று கூறினாலும் சென்னை புறகரில் 2008-ம் ஆண்டு வீட்டு வரியை அந்தந்த நகராட்சி உயர்த்தி உள்ளது.

    சென்னையில் வீட்டு வரி சதுர அடிக்கு 50 பைசா முதல் 1 ரூபாய் 30 காசு வரைதான் உள்ளது. ஆனால் சென்னையுடன் இணைந்த புறநகர் பகுதியான அம்பத்தூர், முகப்பேர், பகுதியில் வீட்டு வரி சதுர அடிக்கு ரூ.3.30 ஆகவும் ஆலந்தூரில் 6 ரூபாய் ஆகவும் ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளது.

    எனவே இப்போது உயர்த்தப்படும் வரி உயர்வு புறநகர் பகுதிகளுக்கு அதிகம் இருக்காது.

    திருவான்மியூரில் 1200 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள ஒரு வீட்டுக்கு 6 மாதத்துக்கு ரூ.1218 சொத்து வரி கட்டுகிறார்கள். ஆனால் அம்பத்தூரில் இதே அளவு கொண்ட வீட்டுக்கு 6 மாதத்துக்கு ரூ.3800 வரி கட்டுகிறார்கள்.

    இந்த ஏற்றத்தாழ்வை சமன் செய்யும் வகையில் சென்னையில் உள்ள வீடுகளுக்கு முழுமையாக வரி உயர்வு அமல்படுத்தப்படும். ஏற்கனவே உயர்த்தப்பட்ட புறநகர் பகுதியில் அதிக அளவு வரி விதிக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளளனர்.

    எனவே வீடு, கடைகளுக்கு புதிய வரி விதிப்புகளை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. #ChennaiCorporation
    Next Story
    ×