என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடையாறில் இன்று காலை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை
    X

    அடையாறில் இன்று காலை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை

    அடையாறில் இன்று காலை ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவான்மியூர்:

    அடையாறு மல்லிகைப்பூ நகர் தாமோதரபுரம் மீன் மார்க்கெட் பகுதியில் வசித்து வந்தவர் சுரேஷ் (வயது33). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

    இவரது மகனும், மகளும் அடையாறு இந்திரா நகரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்களை தினமும் சுரேஷ் மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்று விடுவது வழக்கம்.

    இன்று காலை அவர் வழக்கம்போல் மகனையும், மகளையும் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் திரும்பி வந்தார்.

    பள்ளியில் இருந்து சிறிது தூரம் வந்தபோது ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் திடீரென சுரேசின் மோட்டார்சைக்கிள் மீது மோதினர். இதில் நிலை தடுமாறிய சுரேஷ் மோட்டார்சைக்கிளோடு கீழே விழுந்தார்.

    உடனே மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக அவரை வெட்டினர். தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    அவர் இறந்ததை உறுதி செய்த கொலை கும்பல் அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்று விட்டனர்.

    பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தகவல் அறிந்ததும் அடையார் போலீசார் விரைந்து வந்து சுரேசின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலை நடந்த இடத்தின் அருகே ஒரு வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அதில் ரவுடி கும்பல் சுரேசை தாக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதனை வைத்து கொலை கும்பலை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    கொலையுண்ட சுரேசுக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் பலருடன் மோதல் உள்ளது. இது தொடர்பாக அவர் மீதும் வழக்குகள் உள்ளது.

    2 மாதத்திற்கு முன்பு அவருக்கு ஒருவருடன் தகராறு ஏற்பட்டது. இந்த மோதலில் சுரேசை தீர்த்து கட்ட மர்ம கும்பல் பின்தொடர்ந்து நோட்டமிட்டு வந்துள்ளனர்.

    இதை அறிந்த சுரேஷ் மாமியார் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார். அவர் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதை நோட்டமிட்ட கொலை கும்பல் தங்கள் திட்டத்தை நிறைவேற்றி விட்டனர்.

    கொலையுண்ட சுரேசுக்கு கலைவாணி என்ற மனைவியும், கார்த்திகேயன், சாய் பிரதா என்ற மகன்-மகளும் உள்ளனர்.


    Next Story
    ×