search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகில இந்திய அளவில் மதுரை ரெயில் நிலையத்தில் வரையப்பட்ட ஓவியத்துக்கு விருது
    X

    அகில இந்திய அளவில் மதுரை ரெயில் நிலையத்தில் வரையப்பட்ட ஓவியத்துக்கு விருது

    அகில இந்திய அளவில் தென்னக ரெயில்வேயில், மதுரை ரெயில்நிலையத்தில் பயணிகளை கவரும் வகையில் வரையப்பட்ட ஓவியத்துக்காக விருது வழங்கப்பட உள்ளதாக முதுநிலை வர்த்தக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.
    மதுரை:

    இந்திய ரெயில்வேயில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்களில் தூய்மை மற்றும் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதில் பயணிகளை கவருவதற்காக ரெயில்நிலைய வளாகங்கள், பிளாட்பாரங்கள் ஆகியவற்றில் ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

    மதுரை கோட்ட ரெயில்வேயில் மதுரை, கோவில்பட்டி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய ரெயில்நிலையங்களிலும் பயணிகளை கவரும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களுக்கு தற்போது ரெயில்வே மந்திரியின் விருது கிடைத்துள்ளது.

    இது குறித்து மதுரை கோட்ட ரெயில்வே முதுநிலை வர்த்தக மேலாளர் ஹரிகிருஷ்ணன் கூறியதாவது:-

    ரெயில்வே துறை சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தில் பயணிகளை கவரும் வகையிலான ஓவியங்கள் அனைத்து மண்டலங்களில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் வரையப்பட்டு வருகின்றன. இந்த ஓவியங்கள் அனைத்தும் ரெயில்வே வாரியத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இதில் இந்திய ரெயில்வேக்கு உள்பட்ட 16 ரெயில்வே மண்டலங்களில் இருந்தும் ரெயில்நிலையங்களில் வரையப்பட்ட ஓவியங்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டன. இந்த நிலையில், தென்னக ரெயில்வேயில் மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் மதுரை ரெயில்நிலையத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் ரெயில்வே அமைச்சகத்தின் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, மதுரை ரெயில்நிலையத்தின் 2-வது பிளாட்பாரத்தில் தானியங்கி படிக்கட்டு பகுதியில் வரையப்பட்ட ஓவியத்துக்காக கண்ணன் என்ற ஓவியருக்கும், ரெயில்நிலையத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட கட்டண காத்திருப்பு அறையில் வரையப்பட்ட ஓவியத்துக்காக ரமேஷ் என்பவருக்கும் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ரெயில்வே மந்திரி தலைமையில் வருகிற 12-ந் தேதி டெல்லியில் நடக்க உள்ளது. இதற்காக இந்த ஓவியர்கள் 2 பேரும் டெல்லி செல்கின்றனர். இந்த ஓவியம் குறித்து முதன்முதலாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×