என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலியமூர்த்தி
    X
    கலியமூர்த்தி

    ரியல் எஸ்டேட் அதிபரை கொன்று புதைத்த நண்பர்கள் 3 பேர் கைது

    பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ரியல் எஸ்டேட் அதிபரை கொன்று புதைத்த அவருடைய நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அடையாறு:

    சென்னை திருவான்மியூர் கங்கையம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் கலியமூர்த்தி (வயது 53). ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய மனைவி ஹேமா.

    கடந்த 17-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கலியமூர்த்தி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இதையடுத்து அவருடைய மனைவி ஹேமா, திருவான்மியூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் ஜெயசில் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின்பேரில் கலியமூர்த்தியின் நண்பர்களான வேளச்சேரியைச் சேர்ந்த முருகவேல் (39), காஞ்சீபுரத்தை சேர்ந்த செந்தில்(30), மாடம்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன்(38) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள், கலியமூர்த்தியை கொன்று புதைத்து விட்டதாக திடுக்கிடும் தகவலை போலீசாரிடம் தெரிவித்தனர்.

    கலியமூர்த்திக்கும், அவருடைய நண்பர்கள் முருகவேல், செந்தில், மணிகண்டன் ஆகியோருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் கலியமூர்த்தியை கொலை செய்ய நண்பர்கள் முடிவு செய்தனர்.

    இதற்காக கடந்த 17-ந்தேதி, கலியமூர்த்தியிடம் காஞ்சீபுரத்தில் ஒரு நல்ல இடம் விற்பனைக்கு உள்ளது. அந்த இடத்தை பார்த்து விட்டு வரலாம் என்று நைசாக பேசி அவரை காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை அடுத்த ஓதியூர் என்ற இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் கலியமூர்த்தியை அடித்து கொலை செய்த அவர்கள், பின்னர் அவரது உடலை அதே இடத்தில் குழி தோண்டி புதைத்து விட்டனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து முருகவேல், செந்தில், மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் ஜெயசில், சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் கைதான 3 பேரையும் ஓதியூர் அழைத்துச்சென்றனர்.

    அங்கு அவர்கள், கலியமூர்த்தியை கொன்று புதைத்த இடத்தை அடையாளம் காண்பித்தனர். இதையடுத்து, உடலை தோண்டி எடுத்த போலீசார், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் கைதான 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×