search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வள்ளியூரில் வாகன சோதனையில் போலீஸ் தாக்கியதால் விவசாயி திடீர் தற்கொலை
    X

    வள்ளியூரில் வாகன சோதனையில் போலீஸ் தாக்கியதால் விவசாயி திடீர் தற்கொலை

    வாகன சோதனையில் போலீஸ் தாக்கியதால் விவசாயி திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே உள்ள குமாரபுதுக்குடியிருப்பை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 42) விவசாயி. நேற்று மாலையில் இவர் மதுகுடித்துவிட்டு தனது மொபட்டில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வள்ளியூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    இதையடுத்து போலீசார் சக்திவேலை வழிமறித்தனர். அவர் மது குடித்து இருப்பதை அறிந்ததும் போலீசார் கண்டித்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே போலீசார் சக்திவேலை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் மனமுடைந்த சக்திவேல் திடீரென தனது மொபட்டில் வயலுக்கு அடிக்க வாங்கி வந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் மீட்டு வள்ளியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஏர்வாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது. ஆனால் சக்திவேல் சாவுக்கு காரணமான போலீசாரை பணிநீக்கம் செய்யவேண்டும், அவரது குடும்பத்தாருக்கு நிதிஉதவி அளிக்க வேண்டும் என கூறி அவரது உடலை வாங்க மறுத்து சக்திவேல் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×