search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு
    X

    ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு

    கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில் வக்கீல் வழக்கு தொடர்ந்துள்ளார். #Jayalalithamemorial

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், மூத்த வக்கீல் எஸ்.துரைசாமி தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

    மெரினா கடற்கரையில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே, வழக்கு தொடர்ந்துள்ளேன். சென்னை மெரினா கடற்கரை என்பது உலகிலேயே 2வது நீளமான கடற்கரை ஆகும்.

    இந்த கடற்கரை மிகவும் அழகான, சுற்றுச்சூழல் பாதுகாப்பானதாக இருந்தது. 20ம் நூற்றாண்டில், மனித கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளினால், இந்த கடற்கரை மாசு அடைய தொடங்கியது.

    வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், முதல் அட்டவணையில் இடம் பெற்றுள்ள அரிய வகை ஆமைகள் இனப் பெருக்கத்துக்காக மெரினா கடற்கரைக்கு வருகிறது.

    இந்த கடலில் அரிய வகை மீன்கள், இறால்கள், நூற்புழுக்கள் உள்ளன. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மெரினா கடற்கரையை, தமிழ் வளர்ச்சி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சுடுகாடாக மாற்றி வருகிறது.

    ஊழல் வழக்கில் குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்தவரின் உடலை, இங்கு அடக்கம் செய்திருப்பது அவமானமாகும். ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்னுடைய வழக்கு, கடந்த 18-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

    அப்போது அட்வகேட் ஜெனரல், கடலோர ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கி கடந்த மார்ச் 16ந்தேதி தமிழ்நாடு மாநில கடலோர ஒழுங்குமுறை நிர்வாக ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல் இயக்ககத்தின் உறுப்பினர் செயலாளர் வழங்கியுள்ள அனுமதி உத்தரவை தாக்கல் செய்தார்.


    இத்தனைக்கும், இந்த வழக்கில் இந்த உறுப்பினர் செயலாளர் எதிர்மனு தாரராக உள்ளார். அவர் பதில் மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டுவதற்கு அவர் அனுமதி வழங்கியுள்ளார்.

    இந்த நினைவிடம் 36 ஆயிரத்து 806 சதுர மீட்டர், அதாவது 9.09 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். நினைவிடம் கட்டுவதற்கு தமிழ் வளர்ச்சித்துறை கடந்த மார்ச் 14-ந்தேதி தான் விண்ணப்பமே செய்துள்ளது.

    அந்த விண்ணப்பம் குறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்திடமும், மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையத்திடமும், முறையான அனுமதியை பெறவில்லை. சுற்றுச்சூழல் சட்டத்தின்படி, மாநில அளவிலான சுற்றுச் சூழல் மதிப்பீட்டு நிபுணர்கள் கமிட்டியின் பரிந்துரையையும் வாங்கவில்லை. அனைத்து விதிகளையும் மீறி, இரண்டே நாளில் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

    எனவே, ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டுவதற்கு வழங்கப்பட்ட இந்த அனுமதி சட்டவிரோதமானது. தன்னிச்சையானது. அதனால், இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது. #Jayalalithamemorial

    Next Story
    ×