search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆறுதல்
    X

    நீலகிரி சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆறுதல்

    நீலகிரி சாலை விபத்தில் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். #NilgiriBusAccident #MRVijayaBaskar
    கோவை:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மந்தாடா கிராமம் அருகே சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் உருண்டது. சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்ததால் பேருந்தின் ஒரு பகுதி முற்றிலும் நொறுங்கியது. 

    இந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காயமடைந்தனர். அதில் சிலர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோர் இன்று நேரில் சென்று சந்தித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

    விபத்தில் லேசான காயம் அடைந்த 3 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், படுகாயம் அடைந்த 5 பேருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், தண்டு வடம் பாதித்த பெண்ணுக்கு 5 லட்சம் ரூபாயும் நிதியுதவி வழங்கினர். மொத்தம் 9 பேருக்கு ரூ.15.75 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

    அப்போது பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. விபத்துக்களை குறைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். தமிழகத்தில் தற்போது விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன என தெரிவித்தார். #NilgiriBusAccident #MRVijayaBaskar
    Next Story
    ×