search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் கண்டக்டர்-டிரைவர்கள் பற்றாக்குறையால் 400 பஸ்கள் நிறுத்தம்
    X

    சென்னையில் கண்டக்டர்-டிரைவர்கள் பற்றாக்குறையால் 400 பஸ்கள் நிறுத்தம்

    பஸ்களை இயக்குவதற்கு போதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் இல்லாததால் 400 பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. #Bus #MTCBus
    சென்னை:

    சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு பெருநகர போக்குவரத்து கழகம் மூலம் டவுண் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு 3 ஆயிரத்து 300 பஸ்கள் பெருநகர போக்குவரத்து கழகத்தில் உள்ளன.

    ஆனால் இத்தனை பஸ்களை இயக்குவதற்கு போதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் இல்லை. இதன் காரணமாக 400 பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. தற்போது 2 ஆயிரத்து 900 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

    பெருநகர போக்குவரத்து கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 500 ஊழியர்கள் பதவி ஓய்வு பெறுகிறார்கள். அவர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவதில்லை. 2015-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஊழியர் கூட நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக தற்போது 1500 ஊழியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர்.

    மேலும் டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராமல் விடுமுறை எடுப்பதும் மிக அதிகமாக இருக்கிறது. அவர்களில் பலர் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    தொழில் ரீதியான நோய் பாதிப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு, மாசுவினால் ஏற்படும் நோய்கள், அதிக பணிச்சுமையால் ஏற்படும் பாதிப்புகள், முறையாக சாப்பிடாதது, தூங்க முடியாதது போன்றவற்றால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் ஆகியவற்றின் காரணமாக அவர்கள் விடுமுறை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    ஒரு பக்கம் ஆள் பற்றாக்குறை அதிகமாக இருக்க டிரைவர், கண்டக்டர்கள் பணிக்கு வருவது குறைவாக இருப்பதால் அனைத்து பஸ்களையும் இயக்க முடியவில்லை. இதனால் முழுமையாக பஸ்களை இயக்க முடியாமல் அவற்றை நிறுத்தி உள்ளனர். மேலும் பல பஸ்கள் இயக்க முடியாத அளவிற்கு பழுதாகி இருக்கின்றன. எனவே அவையும் நிறுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு பஸ்கள் நிறுத்தப்பட்டு இருப்பதால் ஒரு நாளைக்கு 40 லட்சம் ரூபாய் பெருநகர போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக சென்னை சாலை போக்குவரத்து கழக இன்ஸ்டிடியூட் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் ஆளும் கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர், கண்டர்களுக்கு உரிய பணியை வழங்காமல் அலுவலக வேலை, குடிநீர் பாட்டில் விற்பனை, காவலாளி வேலை போன்றவற்றை கொடுக்கப்படுவதாகவும் மற்றவர்களை மட்டுமே வேலை வாங்குவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

    ஆள் பற்றாக்குறையால் இருக்கிற ஆட்களையே தொடர்ந்து வேலை செய்ய சொல்வதால் ஊழியர்கள் அதிக பணிச்சுமையை ஏற்க வேண்டியது இருப்பதாக தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த பிச்சை கூறினார்.


    அரசு விதிகள் படி ஒரு பஸ்சை முழுமையாக இயக்குவதற்கு 6.5 லிருந்து 7.5 சதவீதம் ஊழியர்கள் தேவை. ஆனால் சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில் இந்த விகிதாச்சாரம் மிக குறைவாக உள்ளது.

    நேதாஜி போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தை சேர்ந்த அன்பழகன் கூறும் போது, ஆள் பற்றாக்குறை, பணிக்கு வராமை போன்றவை மட்டும் பஸ்கள் நிறுத்தத்துக்கு காரணம் இல்லை. பல பஸ்கள் இயக்க முடியாத அளவிற்கு மோசமாக இருக்கின்றன. இதனால் அவற்றை இயக்காமல் நிறுத்தி விடுகிறார்கள். பணிக்கு வரும் கண்டக்டர், டிரைவர்களை கூட பணி இல்லாமல் திருப்பி அனுப்புகிறார்கள். ஆனால் இந்த வி‌ஷயத்தை நிர்வாகம் மூடி மறைக்கிறது என்று கூறினார்.

    ஆனால் அதிகாரி ஒருவர் கூறும்போது, ஊழியர்கள் பணிக்கு வராததால் மட்டுமே தினமும் 250 பஸ்களை இயக்க முடியவில்லை என்றார்.

    மேலும் பஸ்கள் உரிய நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று திரும்ப முடியவில்லை. இதனால் ஒரு நாளைக்கு ரூ.20 லட்சம் நஷ்டமடைவதாகவும் கூறப்படுகிறது.

    இதுபற்றி டிரைவர் ஒருவர் கூறும்போது சென்னையை பொருத்தவரை போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருக்கிறது. எந்த இடத்துக்குமே குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ்சை ஓட்டிச்செல்ல முடிவதில்லை. பயணிகள் சிறிது நேரம் பஸ் வருகிறதா? என பார்த்து விட்டு வேறு வாகனங்களில் சென்றுவிடுகிறார்கள் என்று கூறினார்.

    இதற்கிடையே மாநகர போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக ஏராளமான பஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை இயக்குவதற்கு போதிய டிரைவர்கள், பஸ் கண்டக்டர்கள் மற்றும் போதிய தொழில்நுட்ப ஊழியர்கள் இல்லை என்று போக்குவரத்து கழக பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த சம்பத் கூறினார். #Bus#MTCBus
    Next Story
    ×