search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி மேலாண்மை ஆணையம் - தமிழக பிரதிநிதிகள் அறிவிப்பு
    X

    காவிரி மேலாண்மை ஆணையம் - தமிழக பிரதிநிதிகள் அறிவிப்பு

    காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தமிழக பிரதிநிகளை நியமித்து தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #CauveryWaterManagement #CauveryManagementAuthority
    சென்னை :

    காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

    அதை ஏற்று மத்திய அரசு கடந்த மாதம் “காவிரி நீர் மேலாண்மை ஆணையம்” அமைத்து, புதிய வரைவு செயல் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.

    மத்திய அரசு வகுத்துள்ள செயல் திட்டத்தின்படி காவிரி மேலாண்மை ஆணையம் டெல்லியில் செயல்படும். காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் அலுவலகம் பெங்களூரில் இருக்கும். இந்த ஆணையத்தில் தலைவர், 9 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அணைகளில் நீர் இருப்பை கண்காணிப்பது, நீரை சேமிப்பது, நீரைத் திறந்து விடுவது ஆகியவற்றை முடிவு செய்யும் அதிகாரம் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    மத்திய அரசு நேற்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டது. அதில் “மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு சட்டம் 6(ஏ) 1956-ன்படி காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இதன் நகல் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது.

    இதையடுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் செயல்வடிவம் பெற்றுள்ளது. அதன் பணிகள் உடனடியாக தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக காவிரி ஆணையத்தின் தலைவர் மற்றும் 9 உறுப்பினர்களை நியமனம் செய்ய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய நிரந்தர தலைவர் நியமிக்கப்படும் வரை அவர் அந்த பொறுப்பை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தமிழக பிரதிநியாக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். தண்ணீர் திறப்பை உறுதி செய்யும் காவிரி ஒழுங்காற்றுக் குழு உறுப்பினராக திருச்சி மண்டல நீர்மேலாண்மை தலைமை பொறியாளர் ஆர். செந்தில்குமார் நியமனம் செய்து தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    மேலும், காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டத்தை டெல்லியில் கூட்ட முடிவு செய்துள்ளனர். அடுத்த வாரம் இந்த கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் செய்து வருவதாக மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #CauveryWaterManagement #CauveryManagementAuthority  
    Next Story
    ×