search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் மேலும் ஒரு இடத்தில் துப்பாக்கிச்சூடு - பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு
    X

    தூத்துக்குடியில் மேலும் ஒரு இடத்தில் துப்பாக்கிச்சூடு - பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் போராட்டக்குழுவை சேர்ந்த 10 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SterliteProtest #BanSterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சுற்று பகுதி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இன்று பொதுமக்களின் போராட்டம் 100-வது நாளை எட்டியது. இதையொட்டி ஏற்கனவே பொதுமக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து போராட்ட குழுவினருடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு தரப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக கூறினார்கள். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் மற்றும் போராட்ட குழுவினர் திட்டமிட்டப்படி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என அறிவித்தார்கள்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள போலீஸ் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் 4 கூடுதல் சூப்பிரண்டுகள், 13 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 3 ஆயிரம் போலீசார் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டனர்.

    தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையம் தெற்கு போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. போராட்டக்குழுவினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டனர்.

    மேலும் கலவரம் ஏற்பட்டால் தடுக்க கூடிய வஜ்ரா மற்றும் வருண் வாகனங்களும் நிறுத்தப்பட்டன. ஸ்டெர்லைட் ஆலை அருகே போராட்டக்காரர்கள் செல்லாத வகையில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. மாவட்டம் முழுவதும் சுமார் 15 இடங்களில் தற்காலிக வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டன.

    மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்து போராட்டத்துக்கு வருகிறார்களா? என்று முழுமையாக கண்காணிக்கப்பட்டது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டால், அவர்களை அடைத்து வைப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டது.

    அதேபோன்று போராட்டத்தில் தீவிரம் காட்டி வருபவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச்சட்டம் 107 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதனிடையே மக்கள் கூட்டமைப்பினர் அறிவித்தபடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பொதுமக்கள் ஆங்காங்கே திரண்டனர். பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் அணி அணியாக திரண்டு வந்தார்கள். தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதி மக்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தை நோக்கி பேரணியாக வந்தனர். அவர்களை வடபாகம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி பேரணிக்கு அனுமதி இல்லை என்றனர்.

    அப்போது போலீசாருக்கும், பொது மக்களுக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு உண்டானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பிறகு போலீஸ் தடையையும் மீறி பொதுமக்கள் பேரணியாக புறப்பட்டு சென்றார்கள்.



    இதனிடையே தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே போராட்டக்குழுவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் உண்டாது. இதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். பதிலுக்கு பொதுமக்களும் கல்வீசினர். இதனால் அந்த பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

    பொதுமக்கள் கல்வீசியதால் தங்களை காத்து கொள்ள போலீசார் ஓடும் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்த போலீஸ் வாகனங்களை தாக்கினார்கள். சிக்னல் மற்றும் தடுப்புகளும் உடைத்து எறியப்பட்டன. தொடர்ந்து போலீசாரை கடந்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி முன்னேறினார்கள்.

    அதே வேளையில் மடத்தூர் பகுதியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்றார்கள். அவர்களை மடத்தூர் பகுதியில் போலீசார் தடுப்பு கட்டைகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும்-பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸ் எண்ணிக்கையை விட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பதட்டம் உண்டானது. இதனால் அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

    எனினும் போலீஸ் தடுப்பையும் மீறி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றார்கள். தூத்துக்குடி 3-ம் மைல் பாலம் அருகே பொதுமக்கள் திரண்டு சென்ற போது கலெக்டர் அலுவலகம் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட போலீசார் பொதுமக்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். தடியடியும் நடத்தினார்கள்.

    இந்த சம்பவத்தின் போது போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அங்கிருந்த தனியார் வங்கி மீதும் கல்வீசப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அப்போது பொதுமக்களை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

    இந்த சம்பவத்தில் ஏராளமானவர்கள் காயம் அடைந்தார்கள். துப்பாக்கி சூட்டில் போராட்டக்குழுவை சேர்ந்த 10 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டது.

    ஜெயராமன், கிளாட்சன்,கந்தையா,வினிஸ்டா,தமிழரசன்,சண்முகம், மணிராஜ், கார்த்திக்,  உள்ளிட்ட 9 பேர் இதுவரை உயிரிழந்தனர். இதனால் துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சில மணிநேரத்திற்கு பின்னர் திரேஸ்புரம் பகுதியில் மீண்டும் போலீசார் போராட்டக்காரர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த போராட்டம் காரணமாக தூத்துக்குடி பகுதி முழுவதுமே போர்க்களமானது. இந்த போராட்டங்களால் தூத்துக்குடி நகர் முழுவதுமே பதட்டம், பரபரப்பாக காணப்பட்டது. #SterlitepProtest #BanSterlite
    Next Story
    ×