search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் தேடி வரும் நிலையில் சென்னையில் நடந்த விழாவில் பங்கேற்ற எஸ்.வி.சேகர்
    X

    போலீசார் தேடி வரும் நிலையில் சென்னையில் நடந்த விழாவில் பங்கேற்ற எஸ்.வி.சேகர்

    போலீசார் தேடி வரும் நிலையில், சென்னையில் நடந்த விழாவில் எஸ்.வி.சேகர் பங்கேற்றுள்ளார்.
    சென்னை:

    பா.ஜ.க. பிரமுகரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறாக கருத்து பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்தநிலையில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க எஸ்.வி.சேகர் 2 முறை சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். அவர் 2 முறை தாக்கல் செய்த ஜாமீன் மனுவையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் எஸ்.வி.சேகர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தனர். எனவே போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருந்து வருகிறார்.

    இதையடுத்து போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வந்தனர். அவர் போலீசார் பிடியில் சிக்காமல் இருந்து வருகிறார். ஐகோர்ட்டு உத்தரவுக்கு பின்னரும் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாமல் இருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

    இந்தநிலையில் சென்னையில் நேற்று முன்தினம் நடந்த இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் பிறந்தநாள் விழாவில் எஸ்.வி.சேகர் கலந்துகொண்டு இருக்கிறார். இந்த விழாவில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பா.ஜ.க. பிரமுகர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் எஸ்.வி.சேகர் சிரித்து பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

    போலீசார் தேடி வரும் நிலையில் எஸ்.வி.சேகர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றிருப்பது மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.

    Next Story
    ×