என் மலர்
செய்திகள்

விருத்தாசலத்தில் 10-ம் வகுப்பு மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்
விருத்தாசலம்:
விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி. விருத்தாசலத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது தொடங்கி உள்ள பொதுத்தேர்வுக்காக படித்து வந்தார். இந்த நிலையில் மாணவிக்கும், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்தனர்.
அதன்படி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து, அடுத்த மாதம் (ஏப்ரல்) 27-ந் தேதி மாணவிக்கும், அந்த வாலிபருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜெயபிரபா, ஊர்நல அலுவலர்கள் கீதா, விஜயா ஆகியோர் மாணவியின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து பேசினர்.
18 வயதுக்கு குறைவான பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம். மீறி திருமணத்தை நடத்தினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். மேலும், அவர்கள் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.






