என் மலர்
செய்திகள்

லஞ்ச புகாரில் சிக்கிய பெருந்துறை சார் பதிவாளர் திடீர் பணியிட மாற்றம்
பெருந்துறை:
ஈரோடு, டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த அமுதா (வயது 55). பெருந்துறை சார் பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி அலுவலக வாசல் முன்பாக ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரிடம் அமுதா பணம் பெற்றார்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகளால் கையும் களவுமாக பிடிபட்டார். அவரிடமிருந்து ரூ. 45 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது.
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவர் மீது 2 வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து பத்திரப்பதிவுத்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் பெருந்துறை சார் பதிவாளர் அமுதா கட்டாய விடுப்பில் சென்றார்.
கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக விடுப்பில் இருந்து வந்த அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் மீண்டும் பணியில் சேர்ந்தார்.
இந்த நிலையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். தற்போது அவர் கரூர் மாவட்ட சிட் பண்ட் நிறுவனங்களின் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். #tamilnews






