என் மலர்
செய்திகள்

சேத்தியாத்தோப்பில் நள்ளிரவில் 2 கடைகளில் ரூ.2 லட்சம் கொள்ளை
சேத்தியாதோப்பு:
சேத்தியாதோப்பு அருகே உள்ள அகரம்ஆலம் பாடியை சேர்ந்தவர் பாலு (வயது 35). இவர் சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையம் எதிரே பஸ் நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
தினமும் வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவது வழக்கம். நேற்று இரவு கடையை பூட்டி விட்டு பாலு வீட்டுக்கு சென்றார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அந்த கடைக்கு வந்தனர். அவர்கள் கடையின் மேற்கூரையை பிரித்து அதன் வழியாக உள்ளே புகுந்தனர்.
கடை கல்லாப்பெட்டி யில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்தனர். அதன் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கொள்ளை மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
இதேபோல் பாலுவின் கடை அருகே உள்ள மற்றொரு கடையிலும் நேற்று இரவு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
சேத்தியாதோப்பை சேர்ந்தவர் சீனிவாசன் (47). இவர் பஸ் நிலைய பகுதியில் செல்போன் ரீசார்ஜ் கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் கடையில் வைத் திருந்த 2 செல்போன்கள் மற்றும் ரூ.6 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகிய வற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இந்த சம்பவங்கள் குறித்து பாலு மற்றும் சீனிவாசன் ஆகியோர் சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடந்த கடைகளை பார்வையிட்டனர்.
கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
ஒரே நாள் இரவில் சேத்தியாதோப்பு போலீஸ் நிலையம் எதிரே உள்ள கடைகளில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews






