என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மைத்துனர்கள் பலி
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் அழகப்பன் மகன் முருகன் (வயது 35), தனியார் ஏஜென்சியில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.
இவருடைய மைத்துனர் சின்னபிள்ளை மகன் பழனிவேல் (50). இவர் அதேஊரில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார்.
இருவரும் நேற்று இரவு முருகனுக்கு சொந்தமான மொபட்டில் சின்னவளையத்திலிருந்து மீன்சுருட்டி செல்வதற்காக பொன்னேரி கரை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
தகவலின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான அடையாளம் தெரியாத வாகனத்தையும் போலீசார் தேடி விசாரித்து வருகின்றனர்.






