search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலக்கியம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 20 டன் விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தல்
    X

    இலக்கியம்பட்டியில் உள்ள அரசு மகளிர் பள்ளி வளாகத்தில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    இலக்கியம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 20 டன் விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தல்

    • இலக்கியம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 20 டன்னுக்கு மேற்பட்ட விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன.
    • பள்ளி வளாக பராமரிப்பு பணிகள் எனக்கூறி தனிச்சையாக சிலர் எவ்வித அனுமதியின்றி வெட்டி கடத்தி சென்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர் நிலை பள்ளியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தின் உள்ளே வேம்பு, புங்கை, பாதம், மூங்கில், வாகை, தேக்கு உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட மரங்கள் நன்கு வளர்ந்து உள்ளது.

    இப்பள்ளியின் சுற்று சுவர் அருகாமையில் உயர் மின் அழுத்த மின்சார வயர் செல்வதால் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்பதால் பள்ளி வளாகத்தில் உள்ள மின்கம்பத்தை அங்கிருந்து அகற்றி பள்ளிக்கு வெளியே அமைக்குமாறு கடந்த 2022-ம் ஆண்டு அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த கவிதா என்பவர் மாவட்ட நிர்வாகத்திற்கும், மின்சார வாரியத்திற்கும் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அதற்கான நடவடிக்கை இன்று வரை எடுக்கவில்லை.

    இந்நிலையில் தற்போது உள்ள பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணம்மாள் என்பவர் பள்ளி வளாக பராமரிப்பு பணிகள் எனக்கூறி தீர்மானத்தை நிறைவேற்றி தன்னிச்சையாக கடந்த சில தினங்களாக மாவட்ட நிர்வாகத்தின் எவ்வித அனுமதியும் பெறாமல், பள்ளி தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்றுவிட்டேன் என தெரிவித்து விட்டு மினி லாரியில் 20 டன்னுக்கும் மேற்பட்ட சுமார் 5 லோடு நன்கு வளர்ந்த வேம்பு, புங்கை, பாதாம் உள்ளிட்ட மரங்களும், பள்ளியின் சுற்று சுவர் ஓரத்தில் நன்கு வளர்ந்து விலை உயர்ந்த தேக்கு மரத்தையும் பள்ளி செயல்பட்டு கொண்டு இருக்கும் போதும் இரவு பகலாக வெட்டி கடத்தி சென்றுள்ளார்.

    இதனால் அப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர்களும், ஆசிரியர் மற்றும் சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியுற்றனர்.

    இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலவலரிடமும் பள்ளி தலைமை ஆசிரியரிடமும் இச்சம்பவம் குறித்து கேட்ட போது, அம்மாதிரியான சம்பவம் எதுவும் நடந்ததாக தெரியவில்லை என்றும், தங்களிடம் யாரும் அனுமதியும் கேட்கவில்லை என்றும் தெரிவித்தனர். இதே போல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பராமரிக்கபட்டு வந்த மரங்களை வெட்டி கடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. ஆனால் கல்வி துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் மரங்களை கடத்துபவர்களிடம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×