search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேப்பூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி:7 பேர் படுகாயம்
    X

    வேப்பூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி:7 பேர் படுகாயம்

    • தங்கவேல் தனியார் மருத்துவமனையில் ஆம்பூலன்ஸ் டிரைவராக பணி செய்து வந்தார்.
    • அண்ணாமலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் தங்கவேல் (வயது 39). இவரது மனைவி சாரதா (30), மகன் சாய் தர்ஷன் (9), மகள் ஆத்விகா (6) ஆகியோருடன் திருப்பூரில் தங்கியுளளார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் ஆம்பூலன்ஸ் டிரைவராக பணி செய்து வந்தார்.

    இவர் தனது உறவினர் நிகழ்ச்சிக்காக சொந்த ஊரான குறிஞ்சிப்பாடிக்கு வந்து, மீண்டும் திருப்பூர் நோக்கி குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். இந்த கார் விருத்தாசலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகே சென்று கொண்டி ருந்தது. ஏ.சித்தூர் அரசு உயர்நிலை பள்ளி அருகே சென்ற போது பெரம்பலூரி லிருந்து கடலூர் நோக்கி வந்த கார், தங்கவேலு சென்ற கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஆம்பூலன்ஸ் டிரைவர் தங்கவேலு பலியானார். அவருடன் வந்த அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பலத்த காயமடைந்தனர்.

    நேருக்குநேர் மோதிய காரில் வந்த 5 பேரும் படுகாயமடைந்தனர். அவ்வழியே சென்றவர்கள் விபத்தில் படுகாயமடைந்தவர்களை விருத்தாசலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்டம், பொம்மணப்பாடியை சேர்ந்த அண்ணாமலை (76) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த தகவல் அறிந்த வேப்பூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து தங்கவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்து குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து விருத்தாசலம் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×