என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூடலூரில் கஞ்சா, குட்கா விற்ற 141 பேர் கைது
- வாகனங்கள் மூலம் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
- நடப்பாண்டில் இதுவரை 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 64 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கூடலூர்
கேரளா, கர்நாடகா மாநிலங்களின் எல்லையில் கூடலூர் உள்ளதால், வெளியிடங்களில் இருந்து வரும் வாகனங்கள் மூலம் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் கூடலூர், மசினகுடி, தேவர்சோலை உள்பட பல்வேறு இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தொடர்ந்து தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர். இருப்பினும் போதைப்பொருட்கள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ரகசியம் காக்கப்படும் இதுகுறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் கூறியதாவது
கூடலூர் உட்கோட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக நடப்பாண்டில் இதுவரை 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 64 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 50,608 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் கஞ்சா வைத்திருந்ததாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 77 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
6987 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா, குட்கா போன்ற போதைபொருள் கடத்தல், விற்பனை செய்தல், சாராயம் காய்ச்சுதல் போன்ற சட்ட விரோத செயல்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
இதன் பேரில் தகவல் தெரிவிப்பவரின் பெயர் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






