என் மலர்
உள்ளூர் செய்திகள்

10, 12-ம் வகுப்பிற்கு இணையான சான்றிதழ்களை பெற அழைப்பு
- சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- 28-ந் தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குனர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, அரசாணையின் படி, 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்.டி.சி,என்.ஏ.சி. பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால், 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்.டி.சி./என்.ஏ.சி. பெற்றவர்கள் 11 மற்றும் 12-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழில் பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டுள்ளது.
இதையடுத்து அரசு தேர்வுகள் இயக்ககத்தால் ஆகஸ்ட் 2022-ல் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்துகொண்டு, தேர்ச்சி பெற்ற தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதனை பின்பற்றி, ஓசூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 28-ந் தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே, தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவியர்களும் ஓசூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தை அணுகி பயனடையுமாறும், மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநர், முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், ஓசூர். தொலைபேசி எண். 04344-262457 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






