என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் 100.4 டிகிரி வெயில்: தலையில் தண்ணீர் ஊற்றியபடி ஸ்கூட்டரில் சென்ற வாலிபர்
    X

    இருசக்கர வாகனத்தில் தலையில் தண்ணீர் ஊற்றியபடி சென்ற வாலிபர்.

    தஞ்சையில் 100.4 டிகிரி வெயில்: தலையில் தண்ணீர் ஊற்றியபடி ஸ்கூட்டரில் சென்ற வாலிபர்

    • கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
    • வெயிலில் செல்வோர் தலையில் முக்காடு போட்டபடியும், குடைபிடித்தவாறும் சென்று வருகிறார்கள்.

    தஞ்சாவூர் :

    தமிழகத்தில் வெயில் கடந்த மார்ச் மாதம் முதல் கொளுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. அக்னி நட்சத்திர தொடக்க காலத்தில் வெயிலின் தாக்கம் இன்றி சில நாட்கள் மழை பெய்தது. அதன் பின்னர் வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை அதிகபட்சமாக 102 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. நேற்று 100.4 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பகல் நேரத்தில் மனிதர்கள் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை காணப்பட்டது..

    வெயில் கொடுமையில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்வதற்காக பொதுமக்கள் குளிர்பானங்கள், இளநீர், நுங்கு, கூழ், மோர் போன்றவற்றை அதிக அளவில் வாங்கி பருகி வருகிறார்கள். வெயிலில் செல்வோர் தலையில் முக்காடு போட்டபடியும், குடைபிடித்தவாறும் சென்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் வெயில் கொடுமையை சமாளிக்க வாலிபர் ஒருவர் நேற்று ஸ்கூட்டரின் முன்பகுதியில் தண்ணீர் நிரம்பிய வாளியை வைத்துக்கொண்டு, வாகனத்தில் சென்றவாறே தண்ணீரை எடுத்து தனது தலையில் ஊற்றியபடி சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

    தஞ்சை நகரின் பல்வேறு பகுதிகளில் அவர் இது போன்று தலையில் தண்ணீர் ஊற்றியபடியே இருசக்கர வாகனத்தில் சென்றதையும், அதனை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து சிரித்தபடியே சென்றதையும் அதில் காண முடிந்தது.

    Next Story
    ×