என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1 கிலோ மல்லிகை ரூ.1,1௦௦ ஓணம், வரலட்சுமி விரதத்தால் பூக்களின் விலை உயர்வு
    X

    கோப்பு படம்.

    1 கிலோ மல்லிகை ரூ.1,1௦௦ ஓணம், வரலட்சுமி விரதத்தால் பூக்களின் விலை உயர்வு

    • நாளை வரலட்சுமி விரதம் மற்றும் கேரளாவில் வருகிற 29ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
    • பெரும்பாலான பூக்கள் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட் தமிழகத்தின் 2வது பெரிய பூ மார்க்கெட் ஆக விளங்குகிறது. நிலக்கோட்டை பகுதியை சுற்றி பூக்கள் சாகுபடி பிரதானமாக உள்ளது. இந்த பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படும் பூக்கள் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

    நாளை வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. மேலும் கேரளாவில் வருகிற 29ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

    ஏற்கனவே பூக்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், தற்போது வரலட்சுமி விரதம் மற்றும் ஓணம் பண்டிகையை யொட்டி உள்ளூர் சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகள் பூக்களை கொள்முதல் செய்ய நிலக்கோட்டை பூ சந்தையில் கூடியதால் விலை மேலும் அதிகரித்துள்ளது.

    நிலக்கோட்டை சந்தையில் மல்லிகை பூ ரூ.1300 மற்றும் ரூ.1200க்கு விற்கப்பட்டது. முல்லை பூ ரூ.450 முதல் ரூ.500 வரையிலும், ஜாதிப்பூ ரூ.300 முதல் ரூ.350 வரையிலும், கன்காம்பரம் ரூ.1000 முதல் ரூ.1200 வரையிலும், செவ்வந்திப் பூ ரூ.150 முதல் ரூ.200 வரையிலும், சம்பங்கி பூ ரூ.450 முதல் ரூ.500 வரையிலும், பட்டன் ரோஸ் ரூ.250, சாதா ரோஸ் ரூ.150 வரையிலும் விற்பனையானது.

    பெரும்பாலான பூக்கள் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    இதேபோல் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.1100, முல்லை ரூ.340, அரளி ரூ.150, கோழிக்கொண்டை, செண்டுமல்லி தலா ரூ.30, ரோஜா ரூ.160, சம்பங்கி ரூ.150 என விற்பனையானது. ஓணம் பண்டிகைக்காக வாடாமல்லி 30 டன்வரை பூமார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டது. வரத்து அதிகரிப்பால் கடந்தவாரம் கிலோ ரூ.30க்கு விற்பனையான வாடாமல்லி இன்று ரூ.15க்கு விற்கப்பட்டது.

    அதிக அளவில் பூக்கள் கேரளா மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    Next Story
    ×