என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஆற்காடு தொகுதி
திமுக- பாமக மோதும் ஆற்காடு தொகுதி கண்ணோட்டம்
பாமக சார்பில் முன்னாள் எம்எல்ஏ-வும், திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ-வும் நேருக்குநேர் எதிர்கொள்ளும் ஆற்காடு தொகுதி கண்ணோட்டம்.
அதிமுக கூட்டணியில் பா.ம.க.-வுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் கே.எல். இளவழகன் திமுக சார்பில் ஜே.எல். ஈஸ்வரப்பன், மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் புதிய விடுதலை கட்சி சார்பில் முகமது ரபி, நாம் தமிழர் கட்சி சார்பில் ரா. கதிரவன், அமமுக சார்பிலா் ஜனார்த்தனன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பா.ம.க. வேட்பாளர் இளவழகன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 1,20,000
2. அசையும் சொத்து- ரூ. 17,92,544
3. அசையா சொத்து- ரூ. 46,00,000
திமுக வேட்பாளர் ஜே.எல். ஈஸ்வரப்பன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 3,25,000
2. அசையும் சொத்து- ரூ. 5,11,13,619
3. அசையா சொத்து- ரூ. 2,81,15,000
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊர் ஆற்காடு ஆகும். நவாப்களின் ஆட்சிக்காலத்தில் ஆற்காடு தலைநகராக விளங்கியது. வாணிபத்திற்காக இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனி சார்பில் ஆங்கிலேயப் படை தளபதி ராபர்ட் கிளைவ் இந்தியாவில் முதன்முதலில் கைப்பற்றிய பகுதி ஆற்காடு ஆகும்.
ஆற்காடு நகரை சுற்றியுள்ள பச்சைக்கல் மசூதி, ராஜா ராணி குளங்கள், சோழர் காலத்தில் கட்டப்பட்ட வரதராஜ பெருமாள் கோவில் ஆகியவை ஆற்காடு நகரின் பழமையை எடுத்து காட்டுபவையாக உள்ளன. ஆற்காட்டின் பிரதான சின்னமாக டெல்லிகேட் விளங்கி வருகிறது. டெல்லியில் ஆட்சியை பிடிப்பதற்கு அடையாளமாக இந்த டெல்லி கேட்டை வெள்ளைக்காரர்கள் அமைத்தார்கள் என்று கூறுகின்றனர்.
ஆர்க் எனப்படும் அத்தி மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் ஆற்காடு என பெயர் வந்ததாகவும், ஆற்காட்டை சுற்றி ஆறு காடுகள் இருந்ததால் ஆற்காடு என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் முன்பு ஆற்காடும் அடங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சரித்திர ரீதியாகவும் பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்றது ஆற்காடு சட்டமன்ற தொகுதி.
கிச்சிலி சம்பா அரிசி
ஆற்காடு பிரியாணியும், புகழ்பெற்ற இனிப்பு வகையான மக்கன் பேடாவும் சிறப்பு பெற்றது. ஆற்காடு கிச்சிலி சம்பா அரிசி ஆற்காடு தொகுதிக்கு பெருமை சேர்க்கிறது.கர்நாடக மாநிலம் நந்திதுர்கம் மலையில் தொடங்கி ஆந்திர மாநிலத்தின் வழியாக தமிழகத்தில் அதிக தூரம் பாய்ந்து செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கடலில் கலக்கும் பாலாற்றில் ஆற்காடு அருகே புதுப்பாடியில் அணை கட்டப்பட்டுள்ளது.
பாலாற்றின் குறுக்கே தமிழகத்தில் கட்டப்பட்ட முதல் அணை இதுவாகும். ஆற்காடு தொகுதியில் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். மேலும் சில பகுதிகளில் நெசவுத்தொழிலும், பீடி சுற்றும் தொழிலும் உள்ளன. இங்கு விவசாயிகள், நெசவாளர்கள், கூலி தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்.
ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் ஆற்காடு நகராட்சியில் 30 வார்டுகளும், விளாப்பாக்கம், திமிரி, கலவை ஆகிய பேரூராட்சிகளும் உள்ளன. மேலும் ஆற்காடு ஒன்றியத்தில் 25 ஊராட்சிகளும், திமிரி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளும், கணியம்பாடி ஒன்றியத்தில் கணியம்பாடி, மூஞ்சூர்பட்டு, துத்திப்பட்டு, சாத்துமதுரை, நெல்வாய், கனிகனியான், வேப்பம்பட்டு, பாலாத்துவண்ணான், நஞ்சுகொண்டாபுரம், கத்தாழம்பட்டு, வல்லம், கீழ்பள்ளிப்பட்டு, மேட்டுபாளையம், கம்மசமுத்திரம், மோத்தக்கல், கம்மவான்பேட்டை, சலமநத்தம் ஆகிய 18 ஊராட்சிகளும், வேலூர் ஒன்றியத்தில் பாலமதி ஊராட்சியும், வேலூர் மாநகராட்சி பகுதியில் இடையன்சாத்தும் அடங்கியுள்ளன. பெரும்பாலும் கிராம பகுதிகள் நிறைந்துள்ள தொகுதி ஆற்காடு தொகுதி ஆகும்.
இந்த தொகுதியில் வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள், முதலியார், யாதவர்கள், நாயுடு, இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினரும் உள்ளனர்.
மொத்த வாக்காளர்கள் 2,60,135 பேர், ஆண்கள் 1,26,652 பேர், பெண்கள் 1,33,475 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 8 பேர் உள்ளனர்.
தொடர்ந்து 2 முறை வெற்றி
1967 மற்றும் 1971-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ஆற்காடு நா.வீராசாமி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து 1967-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரங்கநாத நாயக்கரும், 1971-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எத்திராஜுலு நாயுடுவும் தோல்வி அடைந்தனர். 1977, 1980, 1984-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.ஜெ. உய்யகொண்டான், ஏ.எம்.சேதுராமன், த.பழனி ஆகியோர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்கள் ஆனார்கள்.
1989-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் டி.ஆர். கஜபதியும், அ.தி.மு.க. ஜெயலலிதா அணி சார்பில் கே.வி. ராமதாசும் போட்டியிட்டனர். இதில் கஜபதி வெற்றி பெற்றார். 1991-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் ஜி.விசுவநாதன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1996-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பி.என். சுப்பிரமணியனும், 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ப.நீலகண்டனும், 2006-ம் ஆண்டு பா.ம.க. சார்பில் போட்டியிட்ட கே.எல். இளவழகனும் வெற்றி பெற்றனர். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வி.கே.ஆர். சீனிவாசன் வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் ஜெ.எல். ஈஸ்வரப்பன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மேம்பாலம் அமைக்க வேண்டும்
ஆற்காடு தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும். ஆற்காடு அருகே காவனூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலில் இருந்து தவிர்க்க ஆற்காடு நகரத்தில் இருந்து ஆரணிக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும்.
ஆற்காடு தொகுதியில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அரசு கலைக் கல்லூரி, அரசு ஐ.டி.ஐ. அமைக்க வேண்டும். ஆற்காடு பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யவேண்டும். பாலாற்றில் கழிவுநீர் கலப்பதையும், குப்பைகள் கொட்டப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவ மனையை தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகள் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தேர்தல் வெற்றி
1951- பஞ்சாட்சரம்- காங்கிரஸ்
1957- காதர்ஷெரீப்- காங்கிரஸ்
1962- முனிரத்தினம்- தி.மு.க.
1967- ஆற்காடு வீராசாமி- தி.மு.க.
1971- ஆற்காடு வீராசாமி- தி.மு.க.
1977- உய்யகொண்டான்- அ.தி.மு.க.
1980- சேதுராமன்- அ.தி.மு.க.
1984- பழனி- அ.தி.மு.க.
1989- கஜபதி- தி.மு.க.
1991- விசுவநாதன்- அ.தி.மு.க.
1996- சுப்பிரமணி- தி.மு.க.
2001- நீலகண்டன்- அ.தி.மு.க.
2006- இளவழகன்- பா.ம.க.
2011- சீனிவாசன்- அ.தி.மு.க.
2016- ஈஸ்வரப்பன்- தி.மு.க.
2016 தேர்தல்
ஈஸ்வரப்பன்- தி.மு.க.- 84,182
ராமதாஸ்- அ.தி.மு.க.- 73,091
கரிகாலன்- பா.ம.க.- 35,043
உதயகுமார்- ம.தி.மு.க.- 5,387
அருள்ராமன்- பா.ஜ.க.- 2,648
முருகானந்தம்- சுயே- 406
சகுந்தலா- சுயே- 359
முனுசுவாமி- எல்ஜேபி- 272
நோட்டா- 2,004
Next Story






