search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சர்க்கரை வியாதியும், சிறுநீரகமும்
    X
    சர்க்கரை வியாதியும், சிறுநீரகமும்

    அறிவோம் சிறுநீரகம்: சர்க்கரை வியாதியும், சிறுநீரகமும் - 3

    சர்க்கரை நோய் வருவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கிய காரணம் இது ஒரு பரம்பரை வியாதி.
    சர்க்கரை வியாதி புதிதாக வந்தால்தான் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அது பொது வியாதி போல் ஆகி விட்டது. இன்று அன்றாடம் சந்தித்து கொள்பவர் களில் பலர் சர்க்கரை நோயாளிகளாகவே இருக்கிறார்கள்.

    ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளும்போது சுகரை கட்டுப்பாடடில் வெச்சு இருக்கீங்களா? கொஞ்சம் வெயிட் போட்ட மாதிரி தெரியுதே! வெயிட்டை குறையுங்கள் என்று சாதாரண மக்களிடையே கூட உரையாடல் நடப்பதை கேட்டிருப்போம்.

    அந்த அளவுக்கு சர்க்கரை வியாதி என்பது பாவம், பணக்காரர், வயது குறைந்தவர், வயது அதிகமானவர் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லா தரப்பினருக்கும் வருகிறது.

    சர்க்கரை வியாதியின் தலைநகரம் இந்தியா என்று சொல்லும் அளவுக்கு இந்த நோய் அதிகரித்து வருகிறது. உலக அளவில் சீனாவுக்கு அடுத்ததாக இந்தியாவில்தான் சர்க்கரை நோயாளிகள் அதிகம். 72 மில்லியன்பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    உலக அளவில் 6 பேரை எடுத்துக் கொண்டால் அதில் ஒருவர் இந்தியராக இருக்கிறார். சர்க்கரை நோய் வருவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கிய காரணம் இது ஒரு பரம்பரை வியாதி. பெற்றோர்களிடம் இருந்து சொத்துக் கள், பணம், நகை மட்டும் கிடைப்ப தில்லை. சர்க்கரை வியாதிகூட கிடைக் கும். அடுத்து சரியான உடற்பயிற்சி இல்லாமை, நமது உணவு பழக்க வழக்கங்கள், சுற்றுப்புறச்சூழல், உணவுப் பொருட் களில் இருக்கும் கலப்படங்கள் ஸ்டீராய்டு மருந் துகள் சாப்பிடுதல் இப்படி பல காரணங் களால் சர்க்கரை வியாதி தொற்றி கொள் கிறது.

    சர்க்கரை வியாதியிலும் டைப்-1, டைப்-2 என்று 2 வகை உள்ளது. இதில் டைப்-1 என்பது சிறு வயதிலேயே வந்துவிடும். அதிகபட்சமாக 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இன்சுலினால் மட்டுமே முடியும். டைப்-2வை பொறுத்தவரை மாத்திரைகளால் கட்டுப்படுத்த முடியும்.

    சர்க்கரை நோய் பாதிப்பு கொண்டவர் களுக்கு எந்த உறுப்பை தாக்குவது என்பதை ஜீன்கள் முடிவு செய்கிறது.

    பல நோய்கள் வந்தால் முற்றிலும் குணப்படுத்த முடியும். சில நோய்கள் நாட்பட்ட நோய்களாக நம்மோடு தொடர்ந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் முன்னணியில் இருப்பது சர்க்கரை வியாதி. இதை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும். அதன் மூலம் உடலில் ஏற்படும் ஏனைய பாதிப்புகளை தவிர்க்கவும் முடியும்.

    அதற்கு சர்க்கரை வியாதியை பற்றிய விழிப் புணர்வும், முன்னெச்சரிக் கையும் தான் அவசியம்.

    சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் உறுப்பு பாதிப்பு என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் எச்சரிக்கையுடன் இருந்தால் தள்ளி போட முடியும். பின் விளைவுகள் இல்லாமல் காப்பாற்றிக்கொள்ளவும் முடியும்.

    அடிக்கடி குளிர் காய்ச்சல் வரும். நீர் கடுப்பு, நீர்குத்தல் வரும். அதற்கு மருந்து சாப்பிட்டாலும் குறையாது. இது சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகளால் வருவது.

    இந்த தொற்று வருவதற்கு காரணம் சிறுநீரில் இனிப்பின் அளவு அதிகமாக இருக்கும். வெளியே தரையில் இனிப்பை கொட்டி இருந்தால் அதை தேடி எறும்புகள் வரும். மொய்க்கும், எடுத்துச்செல்லும்.

    அதேபோலத்தான் சிறுநீரில் இனிப்பு அதிகமாக உருவாகும் போது கிருமிகள் அங்கு ஈர்க்கப்படுகிறது. கிருமிகள் மொய்ப்பதால் சிறுநீர் பாதையில் தொற்றுக்கள் உருவாகிறது. சில நேரங்களில் இந்த தொற்று ஏற்படுவதற்கு காரணம் சர்க்கரை நோயின் வெளிப்பாடாக கூட இருக்கலாம். சர்க்கரையின் அளவை பார்த்து சர்க்கரை நோய் காரணமா? இல்லை? என்பது தெரிய வரும்.

    சில நேரங்களில் சிலருக்கு சிறுநீர் தொற்று எந்தவித அறிகுறியும் இல்லாமல் கூட இருக்கலாம். சிறுநீரக பையின் அடிப்பகுதியில் பாதிப்பு இருக்கலாம். அங்கிருந்து அது சிறுநீரகத்தை சென்று தாக்கும். இது மிகவும் ஆபத்தான சிறுநீர் தொற்று. இதை பேப்பிலரி நெப்ரோசிஸ் என்று அழைக்கிறோம்.

    இந்த மாதிரி பாதிப்பு வந்தால் சிறுநீரகத்தை கிருமிகள் செல்லரிப்பது போல் அரித்து சிறுநீர் வழியாக செதில், செதிலாக வெளியேற்றும். அவ்வாறு வெளிப்படும் போது, சிறு சிறு துண்டுகள் வெளியேறுவது போல் இருக்கும். சிறுநீர் போகும்போது மட்டன் துண்டுகள் வந்து விழுவது போல் விழுகிறது டாக்டர் என்பார்கள்.

    ஒரு கட்டத்தில் சிறுநீர் வெளியேற முடியாமல் சிறுநீரகம் அடைப்பட்டு விடும். இது ஒட்டு மொத்தமாக செயல் இழப்பது இல்லை. தற்காலிகாலிகமான செயல் இழப்புதான். இந்த மாதிரி நேரங்களில் இதயத்துக்கு ஸ்டென்ட் வைப்பது போல் ஸ்டென்ட் (செயற்கை குழாய்) பொருத்தி சிறுநீரை வெளியேற்றி சீர்படுத்தி விட முடியும்.

    அடுத்ததாக சிறுநீரில் புரதம் கழிதல் நோய். இதை பேச்சு வழக்கில் உப்பு நீர் என்று தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். இந்த புரதம் கழிதல் நோய் என்பது சிறுநீரகம் பாதிப்படைந்து உள்ளது என்பதன் ஆரம்ப கட்ட அறிகுறி.

    இதை சாதாரண ஆல்புமின் டெஸ்ட்டால் மட்டும் கண்டு பிடித்து விட முடியாது. மைக்ரோ ஆல்புமின் பரிசோதனை மூலம் கண்டுபிடித்து விடலாம். புரதம் கழிவுநோய் தாக்கி இருப்பதை சம்மந்தப்பட்ட நோயாளிகளும் சில அறிகுறிகளை வைத்து அறிந்து கொள்ள முடியும். அதாவது சிறுநீர் கழிக்கும் போது சோப்பு நுரை போல் நுரையுடன் சிறுநீர் வெளிபடும். சிறுநீர் கழித்த இடத்திலும் நுரை அதிக அளவில் சிறிது நேரம் பொங்கி நிற்கும்.

    புரதம் கழிதல் தொற்று ஏற்பட்டு இருந்தால் மூச்சு விடுவதில் சிரமம், அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது, களைப்பு, கை, கால், முகம் வீங்குவது, சரும வறட்சி, தூக்கமின்மை, குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் இருக்கும். மைக்ரோ ஆல்புமின் பரிசோத னைக்கு பிறகு மேக்ரோ ஆல்புமின் பரிசோதனைக்கு செல்ல வேண்டும்.

    இந்த புரதம் கழிதல் சிறுநீரக பாதிப்பால் தான் வந்ததா அல்லது சர்க்கரை நோயை தவிர்த்து பிற நோய்கள் ஏதாவது இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். அதிக அளவில் வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்ளுதல், தொண்டை வலி போன்றவற்றாலும் புரதம் கழிதல் வரும்.

    விழி மண்டலத்தில் காணப்படும் நுண்ணிய ரத்த குழாய்களை பார்த்து கண்டுபிடிக்க முடியும். சில நேரங்களில் தேவைப்பட்டால் கண் மருத்துவரிடம் அனுப்பி ரெட்டினோபதி தானா என்பதை உறுதி செய்வோம். இதன்மூலம் சர்க்கரை வியாதி என்பது உறுதிப்படுத்தப்பட்டால் சிறுநீரக சோதனை தேவைப்படாது.

    இல்லாவிட்டால் சிறுநீரக பாதிப்பால்தான் புரதம் வெளியேறுகிறதா என்பதை உறுதிப்படுத்த சிறுநீரகத்தில் நுண் துளை மூலம் பயாப்சி எடுத்து பரிசோதித்து கண்டறியப்படும். அவ்வாறு உறுதிப்படுத்தப் பட்டால் இது ஆரம்ப கட்டம்தான். எனவே குறுகிய காலத்திற்குள் சீர்படுத்தி விடலாம்.

    ஆனால் கண்டு கொள்ளாமலோ, கண்டு பிடிக்காமலோ இருந்தால் 4-வது நிலையில் ரத்தத் தில் யூரியா அளவு அதி கரிக்கும், 5-வது நிலையை அடையும்போது யூரியா கிரியேட்டின் மிகவும் அதிகரித்து விடும்.

    உடலில் தங்கி இருக்கும் அசுத்தங்கள் வெளியேற முடியாமல் தங்கி விட நேரும் போதுதான் கிரியேட்டின் உடலில் அதிக அளவில் இருக்கும். இது கடுமையான சிக்கல்களை உருவாக்கி விடும்.

    கிரியேட்டின் அளவு ஒரு டெசி லிட்டருக்கு மில்லி கிராமில் கணக்கிடப்படு கிறது. இளம் வயது ஆண்களுக்கு 0.9 முதல் 13 மி.கி./ டெ.லி, பெண்களுக்கு 0.7 முதல் 1.1. மி.கி./டெ.லி, குழந்தைகளுக்கு 0.2 மி.கி./டெ.லி, வரையிலும் இருக்க வேண்டும். இந்த அளவுகள் கூடினால் சிக்கல்கள் வரும். இதன்மூலம் சிறுநீரகம் செயல் இழந்து போகும். கிரியேட்டின் அளவு அதிகரித்தால் அலட்சியம் கூடாது. உடனே சிறுநீரக மருத்துவர்களை அணுக வேண்டும்.

    சிறுநீரகமும் வேலை நிறுத்தமும்

    சிறுநீரகமும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது உண்டு. அதா வது மருந்து, மாத்திரை களால் ஏற்படும் ஒவ்வாமை, வி‌ஷக்கடிகள், சர்க்கரை அளவு தாறுமாறாக ஏறி இருக்கும் போதும், வயிற்றுப்போக்கு, வாந்தி, அதிகமான ரத்த போக்கு போன்றவற்றாலும் சிறுநீரகம் திடீரென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவிடும். சிறுநீர் வழியே சர்க்கரை போகும்போது அது தனியாக போகாது கூடவே நீர் சத்தையும் இழுத்து சென்றுவிடும். இதனால் அதிகமான தாகம் ஏற்படும். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியது வரும். இந்த மாதிரி நேரங்களில் திடீரென்று சிறுநீர் வெளியேறாது. அதாவது சிறுநீரகத்தின் வேலை நிறுத்தத்தால் எல்லாம் முடங்கி விடும். இது தற்காலிகமான செயல் இழப்புதான். இதை தேவைப்பட்டால் டயாலிசிஸ் மூலம் குணப்படுத்திவிட முடியும். ஆனால் நிரந்தர செயல் இழப்பு என்பது நாள் கணக்கில், வாரக்கணக்கில் அல்லது மாத கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்து கொண்டே வரும் சிறுநீரகம் ஒரு கட்டத்தில் மொத்தமாக, நிரந்தரமாக செயல் இழந்து போகும். இந்த நிலையை அடைந்தவர்கள் அடுத்த கட்டமாக டயாலிசிசுக்குத்தான் சென்றாக வேண்டும்.
    Next Story
    ×