search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள்
    X
    ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள்

    சென்னை சித்தர்கள்: ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள்

    சுய கட்டுப்பாடும், குருவிடம் மாறாத அன்பும் இருந்தால் இறைவனை மிக எளிதாக அணுக முடியும் என்பதும் ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள் நமக்கு காட்டி இருக்கும் முக்கியமான பாதைகளில் ஒன்றாகும்.
    கடவுளை நெருங்க நெருங்க கடுமையான சோதனைகள் வரும். அதை புரிந்து கொண்டு  கடவுளை நோக்கி நகர்ந்தால்தான் இறை அருளுடன் இரண்டற ஐக்கியமாக முடியும். இதற்கு தினமும் 5 நிமிடமாவது கடவுளை தியானம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார் ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள்.

    சுய கட்டுப்பாடும், குருவிடம் மாறாத அன்பும் இருந்தால் இறைவனை மிக எளிதாக அணுக முடியும் என்பதும் ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள் நமக்கு காட்டி இருக்கும் முக்கியமான பாதைகளில் ஒன்றாகும். சித்தர் வழிபாடுகளில் அதிக ஈடுபாடு உடையவர்கள் ஒவ்வொரு சித்தரின் கோட்பாடுகளை நன்கு புரிந்து கொண்டு அந்த வழியில் தொடர்ந்து செல்வார்கள்.

    பெரும்பாலான சித்தர்கள் உருவ வழிபாட் டுக்கு முக்கியத்துவம் கொடுக்காத நிலையில் ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள் ஆலயங்களுக்கு செல்வதிலும், உருவ வழிபாட்டிலும் மக்கள் அதிகம் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். அவரது வாழ்க்கை அனுபவங்களை புரிந்து கொண்டால் நாமும் அந்த வழிக்கு செல்வதற்கு எளிதாக இருக்கும்.
    திண்டுக்கல் அருகில் கொடைக்கானல் மலை தொடரில் உள்ள பன்றிமலையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் பிள்ளை. இவரது மனைவி அங்கம்மாள். இவர்கள் இருவரும் பழனி முருகன் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள். ஆறுமுகம் பிள்ளை விவசாயம் தவிர மருத்துவ தொழிலையும் செய்து வந்தார். தியானம் மூலம் சில சக்திகளும் அவரிடம் இருந்தன.

    அங்கம்மாள் கருவுற்ற சமயத்தில் தனது பெற்றோர் வீடு இருக்கும் பாலசமுத்திரம் கிராமத்துக்கு சென்று இருந்தார். அப்போது காசிலிங்க சுவாமி என்ற சன்னியாசி அவருக்கு ஆசீர்வாதம் செய்து, “உனக்கு சித்திரை மாதம் பரணி நட்சத்திரம் தினத்தன்று ஒரு மகன் பிறப்பான். ராமனின் அவதாரம் போன்று அவனது பிறப்பு இருக்கும்” என்று கூறினார். அவர் சொன்னதுபோலவே 1906-ம் ஆண்டு சித்திரை மாதம் பரணி தினத்தன்று அங்கம்மாளுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    அந்த குழந்தைக்கு ராமசாமி என்று பெயர் சூட்டினார்கள். ராமசாமிக்கு இடது பாதத்தில் சுதர்சன சக்கரம் மற்றும் சக்திவேல் இயல்பாகவே இருந்தன. அதே போல அவரது வலது பாதத்தில் சங்கும் சக்கரமும் அமைந்திருந்தன. சுவாமிகளின் இடது கரத்தில் சங்கு, சக்கரம், சேவல் கொடி மற்றும் சக்திவேலும் வலது கையில் சங்கு, சக்கரம், சேவல் கொடி, முருகப் பெருமானின் அணுகோணம் மற்றும் வேலுக்குள் ஒரு சக்தி வேலும் அமையப் பெற்றிருந்தன.

    மேலும் அவரது வலது தோளில் சக்கரமும் இடது தோளில் சங்கும் இருந்தன. அதேபோல் சேவல்கொடியும் தோளில் காணப்பட்டது. அது மட்டுமா? அவர் முகத்தில் இரு புருவ மத்தியில் ஒரு புள்ளியும் இருந்தது. இது அவர் ஆன்மீக சாதனையில் ஈடுபட்டு மேலேழுந்தபோது, இன்னும் பெரிதாகி நெற்றிக்கண் போல் தெரிந்தது. இத்தெய்வீகச் சின்னங்கள் சிவன், சக்தி, விஷ்ணு மற்றும் முருகனின் அம்சங்கள் ராமசாமியை தெய்வீக அவதாரம் என்பதைப் பறை சாற்றின.

    அவர் வளர வளர அவரிடம் சித்தர்களுக்குரிய ஆற்றல் தானாகவே அதிகரித்தது. பாலசமுத்திரத்தில் சல்லிச் சாமியார் என்று ஒருவர் இருந்தார். அவரது பரிபூரண ஆசி ராமசாமிக்கு கிடைத்தது. அதுபோல ஒருதடவை பாலசமுத்திரத்திற்கு வந்த ஒரு சித்தர் அங்கு குளித்துக் கொண்டிருந்த ராமசாமியை அழைத்து, “வாயில் திரு நீற்றைத் தூவி சிறுவேல் ஒன்றால் நாவின் நுனியில் இருந்து அடி வரையில் மந்திரம் ஒன்றை வரைந்தார். பின்னர் அங்கிருந்த விநாயகர் கோவிலுக்குள் சென்று மறைந்தார். 

    இந்நிகழ்ச்சிக்கு பிறகு ராமசாமியிடம் பல சித்தாடல் சக்திகள் வெளிப்பட்டன. எவ்வளவு விஷக்கடியாக இருந்தாலும் தம் பார்வையால் “போ” என்பார். அடுத்த நிமிடம் விஷம் நீங்கி விடும். பேய், பிசாசு பிடித்தவர்களை அழைத்து வந்தால், ராமசாமியை நெருங்கும் போதே அவை ஓடி விடும்.

    அவர் கைகளில் விதவிதமான பூக்களின் வாசத்தை வரவழைக்கும் சக்தி ஏற்பட்டது. அந்த ஆற்றல் ராமசாமிக்கு எப்படி வந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. ஏன், அவருக்கே கூட தெரியவில்லை. குடும்பத்தினர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே திடீரென்று காணாமல் போய் விடுவார். பின்னர் வெகுநேரம் கழித்து திரும்ப வருவார். சில சமயம் அவரது நெற்றியில் திருநீறு இருக்கும். சில  சமயம் அழகான சந்தனப் பொட்டு வைத்திருப்பார். 

    மற்றொரு  சமயம் பெரிய குங்குமப் பொட்டு இருக்கும். இவற்றை அவர் நெற்றியில் வைப்பது யார்? அடிக்கடி எங்கே காணாமல் போகிறார்? என்பவற்றை யாராலும் கண்டறிய இயலவில்லை.

    அவர் கைப்பட்ட மணல் துகள்கள் கற்கண் டாக மாறின. பொடிக் கற்களை கையில் வைத்து மூடித் திறந்தால் அவை மிட்டாய்களாக மாறின. நோயுற்ற குழந்தைகள் மீது அவர் பார்வை பட்டால், அவர் கையால் திருநீற்றை அள்ளிப் பூசினால் குணமானது. அவர் சொல்லும் வாக்கு பலித்தது. இதனால் அவரை எல்லோரும் தெய்வீக குழந்தையாக பார்த்தனர்.

    இந்த நிலையில் ஒருநாள் அவர் பழனி முருகன் கோவிலுக்கு சென்றார். அப்போது  அங்கிருந்த சட்டி சாமியார் “கருகல் வீட்டுக்காரா பழனியப்பா” என்று ராமசாமியை அழைத்து அவரது காதில் சில மந்திரங்களை கூறினார். பின்னர் ஒரு மண்பானையை கொடுத்து இதை உன் வீட்டில் பூஜை அறையில் வைத்து 108 நாட்களுக்கு நான் சொல்லித்தரும்  மந்திரத்தை சொல்லிவா என்று உபதேசித்தார்.
    ராமசாமியு-ம் அதே போன்று செய்தார். இதனால் அவரிடம் பல்வேறு ஆற்றல்களும், இறைஅனுபூதியும் நிலவின. இந்த தகவல் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் பரவியது. இதனால் தினமும் ஏராளமானோர் ராமசாமியிடம் வந்து அருள் பெற்று பலன் அடைந்தனர்.

    ராமசாமி சொன்னது, செய்வது எல்லாம் தீர்க்கமாக நடந்ததால் அவர் உயர்ந்த நிலையில் இருக்கும் சித்தர் என்பதை அனைவரும் புரிந்து கொண்டனர். அதன் பிறகு அவரை அவரது ஊர் பெயருடன் சேர்த்து ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள் என்று அழைக்க தொடங்கினார்கள். நாளடைவில் அந்த பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. 

    சுவாமிகளுடைய ஆழ்ந்த உணர்வுகளை பூர்த்தி செய்ய இறைவன் பாலசமுத்திரத்திற்கு அச்சாண்ட மலைப் பரதேசி எனும் அனுபூதிமானை அனுப்பினார். அவரும் சுவாமிகளை பார்த்து, ‘என்னுடன் நீண்ட பயணத்திற்கு வா’ என்று அழைக்க, சுவாமிகளும் உடனே அவருடன் சென்றார். இவர் சுவாமிகளுக்கு தமது வழிபாட்டு முறையாலும், சொல்லாமல் சொல்லியும் ஆன்ம உணர்வை ஊட்டினார். பல தலங்களுக்கும் சென்று அங்குள்ள புண்ணிய தீர்த்தங்களில் தம் குருவுடன் நீராடி, தாமே நமச்சிவாய சித்தராகி சச்சிதானந்த நிலை அடைந்தார்.

    தமது மிக உயரிய சீடர் ஒரு பரிபூரண ஆத்மஞானியாக, முழுமையாகத் தன்னை உணர்ந்த தத்வ ஸ்வரூபமாக உருவெடுத்ததைக் கண்டு மிகவும் உள்ளம் குளிர்ந்த ஆச்சாண்ட மலைப் பரதேசி எனும் ஞானி, சுவாமிகளை மீண்டும் பாலசமுத்திரத்தில் கொண்டு போய் விட்டுச் சென்றார்.

    சாந்தமான தோற்றமும், இனிய குரலும், அன்பும், கருணையும்  கொண்ட பார்வையால் பன்றிமலை சுவாமிகள் தன்னை நாடி வந்த அனைவரையும் ஈர்த்தார். இதற்கிடையே அவரை வலியுறுத்தி பாப்பாத்தி அம்மாள் என்பவரை திருமணம் செய்து வைத்தனர். சுவாமிகளுக்கு ஒரு மகன் பிறந்தான்.

    அவரது மனைவியும், மகனும் அவருக்கு ஆன்மீக மேம்பாட்டுக்கு உதவியாக இருந்தனர். சுவாமிகளின் தலையாய சீடராக பாப்பாத்தி அம்மாள் திகழ்ந்தார். பாப் பாத்தி அம்மாள் மறைவுக்கு பிறகு  பன்றிமலை சுவாமிகள் தனது பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சென்னைக்கு வந்து நுங்கம்பாக்கத்தில் குடியேறினார்.

    சென்னையிலும் தனது சித்தாடல்களால் பலரது துயர் போக்கினார். பூட்டான் மன்னர் மற்றும் மதகுரு லாமாக்களின் வேண்டு கோளுக்கு இணங்க நேபாளம் சென்ற சுவாமி கள், அம்மக்களது அன்பைப் பெற்றார். பல சாதுக்கள் சுவாமிகளைத் தேடி வந்து தரிசித்துச் சென்றனர். மக்கள் பலர் சித்து வேலைகளைக் கண்டு அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினர். ஆனால் மக்கள் தன்னைக் கொண்டாடுவதை சுவாமிகள் விரும்பவில்லை.

    “நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான். நான் முருகனின் பக்தன். முருகனின் சேவகன். நான் கடவுள் அல்ல. மக்கள் நலனுக் காக இறைவனிடம் மன்றாடும் ஒரு சாதாரண மக்கள் சேவகன்தான் நான்” என்றே அடிக்கடி சொல்வார்.
    தென்ஆப்பிரிக்காவில் நடால் என்ற இடத் தில் 1976-ல் கடுமையான பூஜைகளுக்குப் பின்னர் சக்தி வாய்ந்த நடராஜர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தார்.

    வடஅமெரிக்காவின் கோவில் குழு 1974-ம் ஆண்டு சுவாமிகளை அணுகி, அங்கே நியூ யார்க் நகரத்தில் ஒரு பிள்ளையார் கோவிலும், பிட்ஸ்பர்க் நகரில் வெங்கடேஸ்வரா கோவிலும் கட்ட உதவி கேட்டனர். அவர்கள் விருப்பத்திற்கு இணங்க 3 ஆண்டுகள் தீவிர பூஜைகள் செய்து 42 யந்திரங்களுக்கு உயிரூட்டி, 1977-ம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி நியூயார்க்கில் உள்ள கோவிலுக்கும், 1977-ம் ஆண்டு ஜூலை 6-ந்தேதி அன்று பிட்ஸ்பர்க் கோவிலுக்கும் கும்பாபிஷேகம் செய்தார்.

    மேலும் ஹூஸ்டன் மற்றும் புளோரிடா நகரங்களில் பாலாஜி மற்றும் சக்தி கோவில் களுக்கு அடிக்கல் நாட்டினார். அமெரிக்காவில் இருந்து திரும்பும் வழியில் 1997-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி லண்டன் நகரில் முருகன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்தார்.

    அதற்கு முன்னர் 1948-ம் ஆண்டு தாண்டிக் குடி என்ற பழனி அருகே உள்ள குன்றில் முருகப் பெருமானுக்கு கோவில் கட்டினார். கோவில் கட்டுவதற்கு முன் முருகப் பெருமானை ஜோதி வடிவில் அனைவரும் தரிசிக்க வைத்தார். ஜோதி வெளிப்பட்ட இடத்தில் இருக்கும் திருமண்ணே திருநீற்றுப் பிரசாதமாக அடியார்களுக்கு வழங்கப்படுகிறது.

    சுவாமிகள் தமது அருளாற்றல் மூலம் கண்கண்ட தெய்வமாகவும், எல்லோருக்கும் உற்ற தோழராகவும் விளங்கினார். பலரது வாழ்வுக்கும், வளமைக்கும் காரணமாக அமைந்த ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள் சென்னையில் உள்ள தமது ஆசிரமத்தில் 11.12.1986 அன்று அதாவது கார்த்திகை மாதம் ஏகாதசி தினத்தன்று பரிபூரணமானார்.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் கல்லூரி சாலையும், வில்லேஜ் ரோடும் சந்திக்கும் சந்திப் பில் ‘ஓம் நமசிவாய’ என்று பெயர் பொறிக்கப்பட் டுள்ள ஆசிரமம் உள்ளது. ஆசிரமத்துக்குள் அகண்ட தியான மண்டபத்தில் அழகிய வெண் சலவைக் கல் மேடையே பன்றிமலை சுவாமி களின் ஸ்தூலத் திருமேனி அடங்கியுள்ள இடம்.

    மேடை மீது தாமரை மலரின் மேல் சுவாமி களின் சிறிய கருங்கல் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கிழக்குப் பார்த்த சன்ன தியாக அது அமைந்துள்ளது.  அங்கு வருகிற  14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பன்றிமலை சுவாமிகளின் 35-வது ஆண்டு ஆராதனைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 14-ந்தேதி ஆராதனையில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் பக்தர்கள் ஸ்ரீலஸ்ரீ பன்றிமலை சுவாமிகள் ஜீவசமாதி ஆலயத்துக்கு சென்று வழிபடலாம்.
    Next Story
    ×