search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தலில் என்னை நிற்கவிடாமல் தமிழக அரசு சதி செய்ய வாய்ப்பு - தங்க தமிழ்செல்வன்
    X

    தேர்தலில் என்னை நிற்கவிடாமல் தமிழக அரசு சதி செய்ய வாய்ப்பு - தங்க தமிழ்செல்வன்

    தேர்தலில் என்னை நிற்கவிடாமல் தமிழக அரசு சதி செய்ய வாய்ப்பு உள்ளதாக தங்க தமிழ்செல்வன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #ThangaTamilSelvan #Elecetion

    ஆண்டிப்பட்டி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் ஆண்டிப்பட்டி வந்தார். அவர் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி- எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை விசாரணை செய்ய 3-வது நீதிபதி நியமிக்கப்பட்ட பின்னர், உங்களை தவிர்த்து 17 எம்.எல்.ஏக்கள் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். உங்கள் நிலைப்பாடு என்ன?

    நான் வாபஸ் பெறுவதில் உறுதியாக உள்ளேன். மீதமுள்ள 17 பேரும் உச்சநீதிமன்றத்திற்கு சென்றதுதான் சரி. ஏனென்றால் தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் இந்த விசாரணை செய்தால் நிச்சயமாக எங்களுக்கு சாதகமாக தீர்ப்புவராது. அதனால் தான் வேறு மாநிலத்திற்கு விசாரணை மாற்ற கேட்டு உள்ளனர். அதே நேரத்தில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் சீக்கிரமாக தீர்ப்பை வழங்கினால் தொகுதி மக்களுக்கு நல்லது நடக்கும். 17 பேர் செல்லும் பாதை சரி. அதேபோல நான் செல்லும் பாதையும் சரி.

    கேள்வி- மனுவை வாபஸ் பெறுவதில் பொறுமை காக்க வேண்டியுள்ளது என்று நீங்கள் கூறியுள்ளீர்களே?

    மனுவை வாபஸ் வாங்குவதில் பொறுமை காக்க வேண்டும் என்று கூறவில்லை. அதில் 4 விதமான சிக்கல்கள் உள்ளது. 2 நீதிபதிகள் அமர்வில் மனுவை வாபஸ் வாங்குவதா? அல்லது 3 வது நீதிபதியிடம் வாபஸ் வாங்குவதா? ஒருவேளை மனுவாபஸ் பெறப்பட்டால் ஆண்டிப்பட்டி தொகுதி காலியாக உள்ளதாக உடனடியாக அறிவிக்கப்படுமா? அப்படியே அறிவித்தாலும் உடனடியாக தேர்தல் வராது.

    பாராளுமன்ற தேர்தலோடு தான் தேர்தல் நடக்கும் என்றும் கூறுகின்றனர். தற்போதைய கோர்ட்டு உத்தரவின்படி நான் தேர்தலில் நிற்க முடியும். ஆனால் என்னை தேர்தலில் நிற்கவிடாமல் அரசு தடுப்பதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் என் வேட்புமனுவை தள்ளுபடி செய்யவும் வாய்ப்புள்ளது. அதனால் என்னுடைய மனுவை வாபஸ் வாங்கும் நடவடிக்கையில் கொஞ்சம் அவகாசம் தேவை.


    இதுகுறித்து வழக்கறிஞர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறேன்.

    கேள்வி- தமிழகத்தில் ஆய்வு பணியில் ஈடுபடும் கவர்னரை தடுத்தால் 7 ஆண்டு சிறை அபராதம் விதிப்பதாக கவர்னர் மாளிகை அறிக்கை விடுத்துள்ளதே?

    இது ஜனநாயக நாடா? சர்வாதிகார நாடா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இவ்வளவு அதிகாரம் இருந்தால், இந்தியாவை ஆள்பவர்களுக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கும்? மத்தியில் இருப்பவர்களும், மாநிலத்தில் இருப்பவர்களும் மக்களை அடக்கி ஆள முயற்சி செய்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.

    கவர்னர் ஆய்வு செய்யட்டும் அதில் எங்களுக்கு எந்த தவறும் இல்லை. ஆனால் அதேபோல பசுமை சாலை, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைகள் நடைபெற்ற போது ஏன் மக்களை சந்திக்கவில்லை. ஆய்வு யார் வேண்டுமானாலும் நடத்தலாம். இதேபோல அடக்கு முறை தொடர்ந்தால் வரும் தேர்தலில் மக்கள் இந்த அரசுகளுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.

    கேள்வி-கவர்னர் ஆய்வினால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, மாறாக எங்கள் பணியைதான் அவர் எளிதாக்குகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே?

    கவர்னர் ஆய்வு நடத்துவதால் எந்த பணி அரசு எளிதாகியுள்ளது என்பதை அமைச்சர் விளக்க வேண்டும். ஜெயக்குமார் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார். தமிழக அரசு அமைச்சர் ஜெயக்குமாரை பகடைக்காயாக பயன்படுத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கு அடிபணிந்த அரசு தான் இது என்பதை நிரூபித்து வருகின்றனர்.

    கேள்வி- சமீபகாலகமாக உங்களுக்கும், உங்கள் அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் கருத்துவேறுபாடு இருப்பதாக செய்திகள் வருகிறதே?

    இனிவரும் காலங்களில் எல்லாம் வெளிப்படைத்தன்மையாக தான் நடக்க வேண்டும். அந்த வகையில் எங்களின் கருத்து சுதந்திரத்திற்கு எங்கள் துணை பொது செயலாளர் வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்த வகையில் நான் ராஜினாமா செய்கிறேன் என்று கூறியதற்கு உடனடியாக சரி என்றார். ஜனநாயக முறைப்படி வெளிப்படையாக இருக்கிறோம். அதைத்தான் மக்களும் விரும்புகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilSelvan #Elecetion

    Next Story
    ×