search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3D வடிவிலும் வெளியாகிறது பத்மாவதி: தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பம்
    X

    3D வடிவிலும் வெளியாகிறது பத்மாவதி: தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பம்

    கடும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் பத்மாவதி படத்தின் 3D பதிப்புக்கு தணிக்கை சான்றிதழ் கேட்டு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் மும்பையில் உள்ள மத்திய தணிக்கை வாரியத்திடன் விண்ணப்பித்துள்ளது.
    சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் படம் ‘பத்மாவதி’. ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதி வாழ்க்கை வரலாற்றைக் அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில், பத்மாவதியாக தீபிகா படுகோனும், ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.

    இப்படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    பத்மாவதி திரைப்படம் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினர் இந்தப் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திட்டமிட்டபடி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும்வரை பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

    முன்னதாக, பத்மாவதி படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கோரி முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் சில விபரங்களை தயாரிப்பு நிறுவனம் குறிப்பிடப்படவில்லை என்பதால் அந்த விண்ணப்பத்தை தணிக்கை வாரியம் திருப்பி அனுப்பி விட்டது.

    பத்மாவதி படம் வழக்கமான 2D எனப்படும் இரு பரிமாண வடிவில் தயாரிக்கப்பட்டது. ஆனால், வியாபார உத்தியாக இப்படத்தின் ஒரு டிரெய்லர் 3D-யில் வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்களிடையே கிடைத்திருக்கும் வரவேற்பையடுத்து பத்மாவதி படம் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 2D-யில் இருந்து 3D-க்கு மாற்றம் செய்யப்பட்டது.

    இந்த புதிய 3D வடிவ பதிப்புக்கு தணிக்கை சான்றிதழ் கேட்டு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் மும்பையில் உள்ள மத்திய தணிக்கை வாரியத்திடன் புதிய விண்ணப்பம் ஒன்றை தற்போது சமர்ப்பித்துள்ளது.

    ஏற்கனவே தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பப்பட்ட பத்மாவதி படத்தை இன்னும் நடுவர்கள் குழு பார்க்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், 2D மற்றும் 3D பதிப்புகளில் முதலில் 3D பதிப்பை பார்த்து தணிக்கை சான்றிதழ் அளிக்கப்படும் என மும்பையில் உள்ள மத்திய தணிக்கை வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
    Next Story
    ×