என் மலர்tooltip icon

    கர்நாடகா தேர்தல்

    கர்நாடக சட்டசபை தேர்தல்: அதிருப்தியாளர்களுடன் பா.ஜனதா தலைவர்கள் சமரச முயற்சி
    X

    கர்நாடக சட்டசபை தேர்தல்: அதிருப்தியாளர்களுடன் பா.ஜனதா தலைவர்கள் சமரச முயற்சி

    • மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் 221 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
    • அரிசிகெரே தொகுதியில் பா.ஜனதா சார்பில் டிக்கெட் கிடைக்காததால் சந்தேஷ் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் 221 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜனதா சார்பில் 212 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 166 தொகுதிகளுக்கும், ஜனதா தளம்(எஸ்) 142 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆளும் பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் நிர்வாகிகள் அக்கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    பலர் அக்கட்சியை விட்டு விலகி காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்து வருகிறார்கள். வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்னரே பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.சி.க்கள் புட்டண்ணா, பாபுராவ் சின்சனசூர், என்.ஒய்.கோபாலகிருஷ்ணா எம்.எல்.ஏ. ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் சேர்ந்தனர்.

    வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு டிக்கெட் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்துள்ள மந்திரி எஸ்.அங்கார், எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.குமாரசாமி, நேரு ஒலேகர், கூளிகட்டி சேகர் உள்ளிட்டோர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இருந்து விலகியுள்ளனர். பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

    உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் டிக்கெட் கிடைக்காது என்று கூறியதால் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதனால் அந்த தொகுதிக்கு பா.ஜனதா இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் பா.ஜனதா தலைவர்கள் இறங்கியுள்ளனர்.

    அதானி தொகுதியில் டிக்கெட் கிடைக்காததால், முன்னாள் துணை முதல்-மந்திரியும், கர்நாடக பா.ஜனதா துணைத்தலைவரும், ஒருங்கிணைப்பு குழு உறுப்பினருமான லட்சுமண் சவதியும் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அவர் நேற்று பா.ஜனதாவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கூறி கட்சிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார்.

    அதைத்தொடர்ந்து பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோரை முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார், யாதகிரியில் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. குருபாட்டீல் சிரதாள், நேற்று அக்கட்சியில் இருந்து விலகி பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குமாரசாமி முன்னிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தார்.

    இதே போல் அரிசிகெரே தொகுதியில் பா.ஜனதா சார்பில் டிக்கெட் கிடைக்காததால் சந்தேஷ் போர்க்கொடி தூக்கியுள்ளார். அவர் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். எடியூரப்பாவின் உறவினரான அவரை சமாதானப்படுத்த அக்கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதேபோல் பேடராயனபுராவில் முனேந்திரா, உடுப்பியில் ரகுபதிபட் எம்.எல்.ஏ., பெலகாவி வடக்கில் அனில் பெலகே எம்.எல்.ஏ., கல்கட்டகி தொகுதியில் நிம்மண்ணனவர் எம்.எல்.ஏ., பைந்தூரில் சுகுமார் ஷெட்டி எம்.எல்.ஏ. மற்றும் பெலகாவியில் சில தொகுதிகளில் டிக்கெட் கிடைக்காதவா்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    அடுத்தடுத்த நிகழ்வுகள் பா.ஜனதாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜனதா தலைவர்கள், அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த களத்தில் இறங்கியுள்ளனர். இதற்காக கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங், தேர்தல் பொறுப்பாளரான மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    இதுபற்றி பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கூறுகையில், "இங்கு அதிகாரத்தை அனுபவித்தவர்கள் பிற கட்சிகளுக்கு செல்கிறார்கள். அரசியல் சூழ்நிலைகளை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கட்சியை விட்டு விலகி செல்கிறவர்களை நாங்கள் மீண்டும் சேர்க்க மாட்டோம். அவர்கள் மீண்டும் பா.ஜனதாவுக்கு திரும்ப நினைத்தால் 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்" என்றார்.

    Next Story
    ×