என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    தெருக்கள், மைதானங்களில் வாகனம் ஓட்ட கற்றுக்கொள்ளும் இளம்பெண்கள்
    X
    தெருக்கள், மைதானங்களில் வாகனம் ஓட்ட கற்றுக்கொள்ளும் இளம்பெண்கள்

    தெருக்கள், மைதானங்களில் வாகனம் ஓட்ட கற்றுக்கொள்ளும் இளம்பெண்கள்

    ஊரடங்கு சமயத்தில் நடமாட்டம் இல்லாத தெருக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் இளம்பெண்கள் ஸ்கூட்டர் போன்ற வாகனங்களை ஓட்ட பயிற்சி எடுக்கிறார்கள். ‘ஒருவேளை தவறி விழுந்தாலும் அதை பார்த்து கேலி செய்ய ஆள் இருக்கமாட்டார்களே...’, என்று நகைச்சுவையுடன் கூறுகிறார்கள்.
    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், மக்கள் வெளியே நடமாட தயங்கி வீடுகளிலேயே முடங்கி இருக்கிறார்கள். இதனால் எப்போதும் பரபரப்புடன் இருக்கும் சாலைகள், நடமாட்டத்துடன் காணப்படும் தெருக்கள் இப்போது வெறிச்சோடி இருக்கிறது. காக்கைகளின் இரைச்சலும், நாய்களின் சத்தத்தையும் மட்டுமே இப்போது அதிகம் கேட்க வேண்டியது உள்ளது.

    இதனால் தெருக்கள் அமைதியாக இருக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தை இளம்பெண்கள் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதாவது சைக்கிள், ஸ்கூட்டர், இருசக்கர வாகனங்களை ஓட்ட பழகாதவர்கள், தற்போது அமைதியாக உள்ள தெருக்கள் மற்றும் அருகே உள்ள விளையாட்டு மைதானங்களில் விருப்பம்போல வாகனங்கள் ஓட்டி பயிற்சி எடுக்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களும் இதற்கு உறுதுணையாக இருந்து வாகனங்களை இயக்க சொல்லி தருகிறார்கள். ஒரு சில இடங்களில் கார்களை ஓட்டவும் இளம்பெண்கள், இல்லத்தரசிகள் பயிற்சி எடுப்பதை பார்க்க முடிகிறது.

    இதுதான் சமயம் என்று சத்தமே இல்லாமல் இளைஞர்களும் இருசக்கர வாகனங்கள் ஓட்ட பயிற்சி எடுக்கிறார்கள். குறிப்பாக அதிகாலை வேளையிலும், இரவு 8 மணிக்கு மேலுமே இந்த வாகனங்கள் ஓட்ட கற்றுக்கொள்ளும் பயிற்சி தொடங்குகிறது. கொரோனா பயம் காரணமாக குறிப்பிட்ட தெருவுக்குள்ளாக மட்டுமே இளம்பெண்கள் பயிற்சி எடுக்கிறார்கள். எந்த சூழ்நிலையிலும் அடுத்த தெருவுக்குள் நுழைவதே இல்லை.

    இதுகுறித்து இளம்பெண்கள் சிலர் கூறுகையில், “ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் இந்த நேரத்தை வாகனத்தை ஓட்ட கற்றுக் கொள்ள பயன்படுத்துகிறோம். இல்லையென்றால் இதற்காக தனியாக பயிற்சி மையத்தை அணுகி பணத்தை செலவழிக்க வேண்டிய நிலை வரும். இப்போது அந்த நிலை இல்லை. தவிர ஸ்கூட்டர் ஓட்ட கற்றுக்கொள்ளும்போது கீழே விழ நேரிடும். இப்போது அந்த பயமும் இல்லை. ஏனெனில் கீழே விழுந்தாலும் யாரும் பார்த்து சிரிக்க போவதில்லை. ஆட்கள் நடமாட்டம் தான் இல்லையே...”, என்று நகைச்சுவையாக பதில் அளிக்கிறார்கள்.
    Next Story
    ×