search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஆடை என்பது அவரவர் தனி சுதந்திரம்
    X

    ஆடை என்பது அவரவர் தனி சுதந்திரம்

    மாற்றம் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தும். கலாசாரத்துக்கும் பொருந்தும்.
     அந்தந்த கால கட்டங்களின் நாகரீகத்துக்கும், வசதிக்கும், வாழ்க்கை முறைக்கும் ஏற்ப மாறிவருவதால், அனைவரும் அதற்கேற்ற வகையில் ஆடைகளை அணியத் தொடங்கிவிடுகிறார்கள்.

    தமிழ்நாட்டில் ஆதிகாலத்தில் நமது முன்னோர்களான பெண்கள், உடல் முழுவதும் ஒரே சேலையைக் கட்டிக் கொண்டு இருந்தார்கள். அதன்பிறகு ஜாக்கெட், உள்ளாடைகள் அணியும் பழக்கம் வந்தது. பின்னாட்களில் இளம்பெண்கள் தாவணி அணிந்தார்கள்.

    பிறகு சல்வார் கமீஸ், தொடர்ந்து சுடிதார் வந்தது. பிறகு ஜீன்ஸ்– டீ சர்ட் வந்தது. ஒவ்வொரு முறையும் புது நாகரீக ஆடைகள் வரும்போதெல்லாம் கடும் கண்டனங்கள் எழுவது வாடிக்கை. பழமையில் ஊறிப்போனவர்களால் இந்த புதுமையின் மாற்றத்தை ஏற்கமுடியவில்லை. இப்போது பனியன் போன்ற துணிகளாலான, மெல்லிய பருத்தித்துணியாலான ‘லெக்கின்ஸ்’ ஆடையும், மேலே நீண்ட குர்தா, கமீஸ் போன்ற ‘டாப்ஸ்’ அணிவதும் வழக்கமாகிவிட்டது.

    இப்போது அது பெண்களுக்கான வசதியான ஆடையாகி விட்டது. சமீபத்தில் சில கல்லூரிகளில் ‘லெக்கின்ஸ்’ ஆடை அணிந்துவரக்கூடாது என்று உடை கட்டுப்பாடு தடைவிதித்ததும், பெண்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு கிளம்பிவிட்டது. இது என்ன பெண்கள் அணியும் ஆடைகள் மட்டும் எல்லோருடைய கண்களையும் உறுத்துகிறது. அழகு என்பது பார்ப்பவர்களின் கண்களில்தான் இருக்கிறது என்பார்கள். அதுபோலத்தான் ஆபாசமும் பார்ப்பவர்கள் கண்களில்தான் இருக்கிறது.

    ஒவ்வொரு முறையும் பெண்கள் ஆடை மாறும்போது நிச்சயமாக கண்டன கனைகள் வீசப்படுகிறது. சுடிதார் வந்தபோதே இதென்ன சேலை எவ்வளவு கண்ணியமான உடை, அதை விட்டுவிட்டு சினிமாவில் போட்டுக்கொண்டு வருவதுபோல, இப்படி ஒரு ஆடை என்றார்கள். இப்போது ‘லெக்கின்ஸ்’ வந்துவிட்டது.

    கருப்பு, பச்சை, சிவப்பு, வெள்ளை, நீலம் என்று பொதுவான கலர்களில் ‘லெக்கின்ஸ்’ வாங்கி போட்டுவிட்டால் துவைப்பதற்கும் வசதி, இஸ்திரி போடவேண்டிய தேவையும் இல்லை, ஒரு நீண்ட குர்தா போன்ற மேலாடை அணிந்துவிடுவது வசதியாக இருக்கிறது என்று சொல்லும் பெண்கள், அது சரி பெண்கள் ஆடைபற்றி விமர்சனம் செய்வோர், கால் சட்டைகளை அணிந்து வலம் வரும் ஆண்கள் பற்றியோ, வேட்டியை, லுங்கியை மடித்து அண்டர்வேர் தெரிய அணியும் ஆண்கள் பற்றி மட்டும் எதுவும் சொல்லாமல் வாய்மூடி மவுனியாக இருப்பது ஏன் என்கிறார்கள்.

    மொத்தத்தில், ஆடை என்பது அவரவர் தனி சுதந்திரம், இதில் தேவையற்ற கட்டுப்பாடோ, தேவையற்ற விமர்சனங்களோ தேவையில்லை என்பதுதான் பொதுவான கருத்து.
    Next Story
    ×