search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    செலவுகளுக்கு கடிவாளம் போடுவது எப்படி?
    X

    செலவுகளுக்கு கடிவாளம் போடுவது எப்படி?

    சிறுசிறு செலவுகள் ஒன்றுசேர்ந்துதான், மாதக்கடைசியில் நம்மைத் தடுமாற வைக்கின்றன. அவற்றுக்குக் கடிவாளம் போடுவது எப்படி என்று பார்க்கலாம்.
    ‘சம்பளம் உயர உயர செலவுகளும் உயர்ந்துகொண்டே போகின்றன. சமாளிக்கவே முடியவில்லை’ என்பது பலரின் புலம்பலாக உள்ளது.

    சிறுசிறு செலவுகள் ஒன்றுசேர்ந்துதான், மாதக்கடைசியில் நம்மைத் தடுமாற வைக்கின்றன. அவற்றுக்குக் கடிவாளம் போடுவது எப்படி?

    இதோ சில டிப்ஸ்...

    * சம்பளம் வாங்கியவுடன் ஓர் உற்சாகம், உல்லாசம் மனதில் பிறந்துவிடுகிறது. அந்த மனநிலையிலும், பர்ஸ் கனமாக இருக்கும் தெம்பிலும் நம்மையும் அறியாமல் அதிக செலவு செய்துவிடுகிறோம். மாத ஆரம்பத்தில், உயர்தர உணவுவிடுதிகள், மால்கள் போன்றவற்றில் செய்யும் செலவுகளை கூடுமானவரை தவிர்க்கலாம்.

    * ஆன்லைன் வணிக தளங்கள் வெளியிடும் கவர்ச்சி விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு தேவையற்ற பொருளையும் வாங்கிவிடுவது சிலரின் வழக்கமாகி வருகிறது. செல்போனில் ‘தள்ளுபடிகள்’ பற்றி தகவல் தரும் எந்த ஆப்ஸுக்கும் நோட்டிபிகேஷன் அமைப்பை ஆன் செய்து வைக்காதீர்கள். காரணம், தினமும் வரும் டாப்-அப் செய்திகள் உங்களை அந்தப் பொருளை ஏதாவது ஒருநேரத்தில் வாங்கத் தூண்டும்.

    * ‘அப்டேட்’ ஆகிறோம் என்ற பெயரில், இன்று பலர், குறிப்பாக இளைஞர்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை அடிக்கடி மாற்றுவது, விலை அதிகமுள்ளதாக வாங்க நினைப்பது என்று இருக்கிறார்கள். இது நம்மை அடிமைப்படுத்தும் விஷயம் என்று உணராவிட்டால், பணம் ஒருபக்கம் போய்க்கொண்டேதான் இருக்கும்.

    * திரைப்படங்களை அவை வெளியானதுமே முன்னணித் திரையரங்குகளில் பார்த்துவிட வேண்டும், அங்குள்ள அதிகப்படியான விலையைப் பற்றிக் கவலைப்படாமல் தாராளமாகச் செலவு செய்ய வேண்டும் என்று நினைத்தால் பணம் கரையத்தான் செய்யும்.

    * அடுத்தவர்கள் அது வாங்கிவிட்டார்கள், இது வாங்கிவிட்டார்கள் என்று வீட்டில் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் டி.வி., ஏ.சி, பிரிட்ஜ் போன்றவற்றை ஓரங்கட்டி விட்டு புதிதாய் வாங்குவதைத் தவிர்க்கலாம். அந்தப் பணத்தை நல்ல லாபம் தரும் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

    * இப்போது எங்கும், எதற்கும் ‘டிரீட்’ கொடுப்பது, கொடுக்கவைப்பது என்ற கலா சாரம் வளர்ந்திருக்கிறது. ‘டிரீட்’ கேட்கும்போதும், அதில் பங்கேற்கும்போதும் சந்தோஷமாகத்தான் இருக்கும். நாம் ‘டிரீட்’ வைக்கவேண்டிய நிலையில்தான் சங்கடமாக இருக்கும். டிரீட் கலாசாரத்தில் ஆர்வம் உள்ளவர், மாதம் ஒன்றிரண்டு ‘டிரீட்’களாவது வைக்க வேண்டி இருக்கும். பணமும் ‘பணால்’ ஆகிவிடும்.

    * நம் வீட்டு நிகழ்வுகளான பிறந்தநாள் போன்ற வற்றை ஆடம்பரமாகத்தான் நடத்த வேண்டும் என்பதில்லை. எளிமையும் இனிமை சேர்க்கும்.

    * பேஷனில் பின்தங்கிவிடக்கூடாது என்று தேவைக்கு அதிகமான புதிய புதிய ஆடைகளையும், அழகுசாதனப் பொருட்களை வாங்கிக் குவிப்பதையும் குறைத்துக்கொள்ளலாம்.

    * எந்நேரமும் செல்போனில் ஆழ்ந்திருக்கும் ஆர்வத்தால் பலர் தங்களையும் அறியாமல் அதிக செலவுக்கு உட்பட்டுவிடுகிறார்கள். ‘வாட்ஸ்அப்’, ‘யுடியூப்’ என்று செல்லின் சுழலில் சிக்கிக்கொண்டால், வெயிலில் இட்ட பனிக்கட்டி போல பணம் கரைந்துவிடும்.

    * கிரெடிட், டெபிட் கார்டு மூலம் செலவு செய்யும்போது நம்மையும் அறியாமல் அதிக செலவு செய்து விடுகிறோம். பணத்தை எண்ணிக்கொடுக்கும்போது செலவழிப்பது இயல்பாகவே குறையும். எனவே கிரெடிட், டெபிட் கார்டுகளை பர்சில் அல்லாமல் வீட்டிலேயே வைத்திருந்தது, திட்டமிட்ட செலவுகளுக்கு மட்டும் எடுத்துச் செல்லலாம்.

    * ஏதோ ஒரு வேகத்தில் ‘ஜிம்’முக்கு கட்டணம் செலுத்திச் சேர்ந்துவிட்டு, பின்னர் சோம்பல்பட்டு படுக்கையில் சுருண்டு கிடப்பதால் பண விரயமே. வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

    * அருகில் உள்ள இடங்களுக்குக் கூட மோட்டார் சைக்கிள், ஆட்டோ, டாக்சியை நாடத் தேவையில்லை. கூடுமானவரை நடந்து செல்வது, பர்ஸுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நலம் பயக்கும்.
    Next Story
    ×