search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சாதனை பெண்களின் தைரியத்துக்கும் மிகப் பெரிய சல்யூட்
    X

    சாதனை பெண்களின் தைரியத்துக்கும் மிகப் பெரிய சல்யூட்

    ஆணாதிக்கத்தால் தங்கள் திறமைகளை உணராத பெண்கள் இப்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி தங்களுக்குள் மறைந்து கிடக்கும் ஆற்றலை வெளிக்காட்ட தொடங்கி இருக்கிறார்கள்.
    பாவனாகாந்த், மோகனாசிங், அவனி சதுர்வேதி.

    - இவர்கள் மூன்று பேரும் சரித்திரத்தில் இடம் பிடிக்கப் போகும் சாதனைப் பெண்கள்.

    இந்திய விமானப் படையில் போர் விமானங்களை இயக்கும் தகுதி பெற்றுள்ளார்கள். வருகிற 18-ந் தேதி விமானிகளாக அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.

    அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எதிரி நாட்டை பந்தாடும் நமது போர் விமானங்களை அனாயசமாக ஓட்டி ஆண்களுக்கு நிகராக நாங்களும் போர்க்களத்தில் எதிரிகளை கலங்கடிப்போம் என்று பறை சாற்றப்போகிறார்கள்.

    காதில் கேட்கும் போதே தேன் வந்து பாய்ந்தது போல் இருக்கிறது.

    காலம் மாறி விட்டது. சாதிக்கப்பிறந்தவர்கள் பெண்கள் என்பதை ஒவ்வொரு துறையிலும் நிரூபித்து வருகிறார்கள். ‘அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு’-என்று பெண்களை அடக்கி வைத்த காலம் ஒன்று இருந்தது.

    அந்தக் காலம் மலையேறிவிட்டது. பெண்கள் பூவிலும் மென்மையானவர்கள். கவிஞர்களின் கற்பனைக்கும், கவிதைக்கும் கருப்பொருளாக காட்சி அளித்தார்கள். இன்று வியத்தகு சாதனைகளால் வியக்க வைக்கிறார்கள்.

    எந்த துறைகளிலெல்லாம் பெண்களால் சாதிக்க முடியாது என்று நினைத்தோமோ அந்த துறைகளிலெல்லாம் முத்திரை பதித்து தங்கள் திறமையை நிரூபித்து வருகிறார்கள்.

    அன்பை சுமக்கும் பெண்களால் துப்பாக்கிகளையும், ஏவுகணைகளையும், குண்டுகளையும் சுமப்பது எளிதா? என்ற கேள்வியை சுக்கு நூறாக்கி விட்டார்கள். இந்த பூக்கள் புயலானால் எதையும் புரட்டிப் போடும் என்று புரிய வைத்துள்ளார்கள். நமது ராணுவத்திலும் வீர தீரத்துடன் வீராங்கனைகள் பவனி வருகிறார்கள்.

    இப்போது அதில் இருந்தும் ஒரு படி மேலே போய் விமானப் படையில் ஜெட் விமானங்களையும் சிட்டாய் செலுத்தி தங்கள் வீரத்தை வெளிப்படுத்தும் வீர மங்கைகளாக உருவெடுத்துள்ளார்கள்.

    இந்திய பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பது ஒவ்வொரு கால கட்டத்திலும் நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது.

    சுதந்திர போராட்டத்தில் ஒரு ஜான்சி ராணி லட்சுமிபாய், தில்லையாடி வள்ளியம்மை, வீரமங்கை வேலு நாச்சியார், ராணி மங்கம்மாள், மனித குண்டாக மாறிய குயிலி என்று பலரது வீரம் செறிந்த வாழ்க்கை என்றென்றும் பெண்களின் வீரத்துக்கு உரமாக உள்ளன. முறத்தால் புலியை விரட்டிய நம் பெண்கள் வழித்தோன்றல்கள் வீரமிக்கவர்கள்தான்.

    ஆனால் இடைப்பட்ட காலத்தில் ஆணாதிக்கத்தால் தங்கள் திறமைகளை உணராத பெண்கள் இப்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி தங்களுக்குள் மறைந்து கிடக்கும் ஆற்றலை வெளிக்காட்ட தொடங்கி இருக்கிறார்கள்.

    இந்திய பெண்கள் நெருப்புக்கு ஈடானவர்கள். நெருங்கினால் பொசுக்கிவிடுவார்கள் என்ற பயம் உண்டு.

    இந்த பெண்கள் போர்க்களத்திலும் புயலாய் புகுந்து எதிரிகளை துவம்சம் செய்யும் வலிமை படைத்தவர்கள் என்பது நிரூபணமாகி வருகிறது.

    பெண்கள் பூக்கள் மட்டுமல்ல. புயலாய் உருவெடுப்பவர்கள்! அழகானவர்கள் மட்டுமல்ல. ஆபத்தையும் தருபவர்கள். அதனால்தான் அழகான ராட்சசி என்றார்கள்!

    பெண்களால் ஆக்கவும் முடியும். பகைவனை அழிக்கவும் முடியும் என்பதற்கு உண்மையான இலக்கணத்தை படைத்துள்ளார்கள்.
    பெண்களை போற்றுவதும், வணங்குவதும் நம் பண்பாடு. இந்திய பெண்களின் தைரியத்தை கல்பனா சாவ்லாவும், சுனிதா வில்லியம்சும் உலகிற்கு எடுத்து காட்டினார்கள்.

    இதோ அந்த வழியில் படை நடத்தவும் தயாராகிவிட்டார்கள் நம் பெண்கள். அவர்களின் வீரத்துக்கும், தைரியத்துக்கும் மிகப் பெரிய சல்யூட்.

    இது தொடக்கம்தான். வரும் காலத்தில் பெண்கள் மேலும் சாதிக்க துணை நிற்போம்!
    Next Story
    ×