search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அலுவலக வேலையை திட்டமிட்டு செய்யுங்க
    X

    அலுவலக வேலையை திட்டமிட்டு செய்யுங்க

    இன்று நீங்கள் கொடுக்கும் மரியாதை நாளை உங்களை தேடிவர வேண்டுமானால் முதலில் நீங்கள் பணியுங்கள்.
    அதிகப்படியாக வேலை பார்த்து உயிர் விட்டவர்கள் யாரும் கிடையாது. பார்க்கிற வேலையில் அதிகப்படியாக குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டு அதனால் வந்த சிக்கல்களை சமாளிக்க முடியாமல் உயிர் விட்டவர்கள் வேண்டுமானால் இருக்கலாம்.

    சிலர் தலைக்கு மேல்வேலை கிடக்கிறது என்று சலித்துக் கொள்வார்கள். இருக்கட்டும். அதில் எந்த வேலை உடனடியாக செய்யப்பட வேண்டியது என்பதை தீர்மானம் செய்து கொள்ளுங்கள். அதையே முனைப்பாக முடியுங்கள். அந்த வேலையை முடிக்கும்போதே அதையடுத்த முக்கியம் உங்கள் மனதிற்குள்வந்து விடும்.

    ஒரே மூச்சாக அதையும் முடியுங்கள். இடையில் சில வேலைகள் எட்டிப் பார்க்கும். அது உங்களுக்கு மெயின் வேலையை முடக்க வந்த வேகத்தடையாகவும் தோன்றலாம். வேலை நேரத்தில் `லஞ்ச் அவர்’ குறுக்கிட்டால் கோபித்துக் கொள்ளவா செய்கிறீர்கள்? அவசரமாய் அள்ளிப்போட்டுக் கொண்டு வந்து வேலையை தொடருகிறீர்களா, இல்லையா? அதுமாதிரிதான் இடையில் குறுக்கிடும் வேலையை அதன் மீது சலிப்பு தோன்றாமல் முடித்துக் கொடுக்கவும் பழகிக் கொள்ளுங்கள்.

    அலுவலகப் பணியாளர்கள் பலரும் தங்கள் டேபிளின் மேல் கண்டதையும் கொட்டி வைத்திருப்பார்கள். பார்க்கும்போதே `இத்தனை வேலைகளா ’ என்ற மலைப்பு எட்டிப் பார்க்கும். அத்தனையையும் அடுக்கி அதில் அன்றைய முக்கியமாக தோன்றுவதை முதலில் எடுத்துக் கொள்ளுங்கள். `மதியத்திற்குள்- மாலைக்குள்’ என்று பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

    இந்த திட்டமிடல் உங்களுக்கு வேலையை சுலபமாக்குவதோடு, மனநெருக்கடியையும் வெகுவாக குறைத்து விடும். சிலர் அலுவலகத்தில் எல்லா வேலைகளையுமே பாதிப்பாதி முடித்து வைத்திருப்பார்கள். இந்தப்பாதி முடிந்த வேலைகள் அப்படியே கிடக்க, புதிய வேலை வந்து நெருக்கடி கொடுத்து விடும்.

    அப்போது பெண்டிங் வேலை சம்பந்தமான பைலை உடனடியாக முடித்து தர மேலதிகாரிகள் நெருக்குவார்கள். அவசரம் கருதி அந்த வேலையை முடிக்கத் தலைப்பட்டால், இன்றைய அவசரவேலை தடைப்பட்டு விடும். மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி என்பது போல் கடைசியில் குறித்த நேரத்தில் இதையும் முடிக்க முடியாமல் அதையும் முடிக்க முடியம் வீணாக கெட்டபெயர் தான் மிஞ்சும்.

    காலையில் குளித்ததும் பிரஷ்சாக காபியை அருந்தத் தொடங்கும்போதே இன்றைய வேலைகள் உங்கள் மனதில் எட்டிப் பார்க்கத் தொடங்கி விட வேண்டும். அந்த பட்டியலில் எதை முதலில் செய்தால் சரியாக இருக்கும் என்ற திட்டமிடலும் நல்லது. காலையில் வங்கிக்குப்போய் பார்க்க வேண்டிய வேலையை மாலையில் பார்க்க முடியாதல்லவா!

    காலையில் பார்த்தே ஆக வேண்டிய வேலைகளை தெளிவான திட்டமிடலோடு செய்யத்தொடங்கி விட வேண்டும். இரவில் படுக்கைக்கு போனதும் இன்றைய வேலைகளை எல்லாம் ஒருகணம் மனதில் கொண்டு வர வேண்டும். அப்போது அதை குறையில்லாமல் செய்தீர்களா என்பது உங்கள் மனக்கண்ணில் பளிச்சிடும். அதில் ஏதாவது தவறு இருந்தால் அடுத்தகணம் மனதுக்குள் `அய்யோ’ என்று ஒரு பிளாஷ் அடிக்கும். அதை மட்டும் மறுநாள் முதல் வேலையாக நினைவூட்டி சரிசெய்ய பழகிக் கொள்ள வேண்டும்.

    சிலர் ஆர்வக் கோளாறு காரணமாக அத்தனை வேலையையும் தாங்களாகவே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்கள். இப்படிச்செய்யும்போது அலுவலகம் நிச்சயம் உங்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடத்தான் செய்யும். புரமோஷன், சம்பள உயர்வு வந்து கிச்சுக்கிச்சு மூட்டும். இப்படி ஓய்வு, ஒழிச்சல் இன்றி நீங்கள் வேலைகளை எடுத்துக் கொள்ளும்போது மனஅமைதி, தூக்கம் இரண்டையும் அதற்கு தாரை வார்க்க வேண்டியிருக்கும்.

    மேலதிகாரிகளை மதிப்பது உங்கள் வேலையின் கட்டாயம். மேலதிகாரிகளின் கட்டளைக்கு கீழ்ப்படியாத எவரும் தங்கள் பணிக்காலத்தில் கட்டளையிடும் பதவிக்கான இடத்தை கடைசிவரை அடையவே முடியாது. இன்று நீங்கள் கொடுக்கும் மரியாதை நாளை உங்களை தேடிவர வேண்டுமானால் முதலில் நீங்கள் பணியுங்கள்.
    Next Story
    ×