search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாதவிடாய்: நாப்கின்களும்.. விழிப்புணர்வும்..
    X
    மாதவிடாய்: நாப்கின்களும்.. விழிப்புணர்வும்..

    மாதவிடாய்: நாப்கின்களும்.. விழிப்புணர்வும்..

    பெண்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு மருத்துவ குணங்களுடனும் இன்றைய காலகட்டத்தில் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கப்படுகின்றன. இதை பயன்படுத்துவதன் மூலம் பல அசவுகரியங்களை தவிர்க்கலாம்.
    மாதவிடாய் என்பது பெண்களுக்கு அசவுகரியமான விஷயம். எவ்வளவு திறமைசாலிகளாக, மன வலிமை கொண்டவர்களாக இருந்தாலும் அந்த நாட்களில் சற்று சோர்ந்துவிடுவார்கள். மாதந்தோறும் கடந்து செல்ல வேண்டிய கடினமான நாட்களாக மாதவிடாய் அமைந்திருக்கிறது. மாதவிடாய் கால சிரமங்களை கூடுமானவரை குறைப்பதற்கான வரப்பிரசாதமாக அமைந்திருப்பவை ‘சானிட்டரி நாப்கின்கள்’. பெண்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு மருத்துவ குணங்களுடனும் இன்றைய காலகட்டத்தில் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கப்படுகின்றன. இதை பயன்படுத்துவதன் மூலம் பல அசவுகரியங்களை தவிர்க்கலாம். குறிப்பாக அலுவலகம் செல்லும் பெண்களுக்கு மிகுந்த சவுகரியம் அளிக்கக்கூடியது.

    ஆனால் இன்றும் கிராமப்புறங்களில் சானிட்டரி நாப்கின் பற்றிய விழிப் புணர்வு இல்லாத நிலை இருக்கத்தான் செய்கிறது. அதனை பயன்படுத்தாமல் தவிர்த்து விடுவதால் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த நவீன யுகத்திலும் மாதவிடாய் காலத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களை பற்றி பெண்கள் மற்றவர்களிடம் சொல்வதற்கு தயங்கும் நிலைதான் இருக்கிறது. கடைக்கு சென்று சானிட்டரி நாப்கின் வாங்குவதற்கு தயங்கும் நிலையும் தொடரத்தான் செய்கிறது. தங்கள் மகளின் நலனில் அக்கறை காண்பிக்கும் பெற்றோர் கூட மாத விடாய் விஷயத்தில் கோட்டை விட்டுவிடுகிறார்கள். ஆரம்ப காலகட்டத்திலேயே மாத விடாய் பற்றிய புரிதலை உண்டாக்க வேண்டும். அந்த நாட்களை எப்படி கடக்க வேண்டும் என்பதை மகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியது தாயாரின் கடமை.

    அந்த சமயத்திலும் தங்களின் பணிகளை சவுகரியமாக செய்வதற்கு பழக்க வேண்டும். அதை ஒரு பெரிய பாரமாக நினைத்து அன்றாட பணிகளை முடக்கிவிடக்கூடாது. எல்லா நாட்களிலும் இயல்பாக இருப்பதற்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அது அசவுகரியத்தை தவிர்க்க உதவும். பழங்காலத்தில் மாதவிடாய் சமயத்தில் பெண்களை தீண்ட தகாதவர்களாக கருதி ஒதுக்கி வைக்கும் நிலை இருந்தது. அது அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியது. இன்று காலம் எவ்வளவோ மாறிவிட்டது. மாதவிடாய் பற்றிய புரிதலை பெற்றோர் உண்டாக்க முடியாத பட்சத்தில் தகுந்த மருத்துவரிடம் அழைத்து சென்று புரிய வைக்கலாம்.

    மனித உடலில் உண்டாகும் வியாதிகளை குணப்படுத்தும் சக்தி ரத்தத்தில் இருக்கும் ‘ஸ்டெம் செல்களுக்கு’ உண்டு. இத்தகைய சிறப்பு வாய்ந்த செல்கள் பெண்களின் ரத்தத்தில் நிறைந்திருக்கிறது. ஆண்களின் ரத்தத்தில் அத்தகைய சக்தி கிடையாது. புற்றுநோய் முதல் அத்தனை வகையான நோய்களையும் இந்த ஸ்டெம்செல்கள் குணப்படுத்தும். இது பெண்களை காக்கும் சக்தியாக செயல்படக்கூடியது. ஆனால் மாதவிடாய் நாட்களில் உடலில் உள்ள நச்சுக்கிருமிகள் ரத்தத்தில் கலந்து வெளியேறுவதால் நோய்த்தொற்று ஏற்படும் என்று கருதி விலகி இருக்கிறார்கள்.

    பொதுவாகவே பெண்கள் தங்கள் பிரச்சினைகளை வெளியே சொல்ல தயங்குவார்கள். நம்பிக்கைக்குரியவர்களிடம்தான் மனம் விட்டு பேசுவதற்கு முன் வருவார்கள். ஆனாலும் மாதவிடாய் கால சிரமங்கள் பற்றி பேசுவதை தவிர்த்துவிடுவார்கள். இந்த விஷயத்தில் தாயார்தான் மகளுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.
    மாதவிடாய்
    கால அசவுகரியங்களை எதிர்கொள்ளும் வழிமுறைகளை விளக்கி கூறி ஆசுவாசப்படுத்த வேண்டும். இது அவர்களுடைய ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் தனி கவனம் செலுத்த வேண்டும். நாப்கின் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கி கூற வேண்டும். எத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். உடலை எப்படி தூய்மையாக பராமரிக்க வேண்டும், உள்ளாடைகளை கிருமி நாசினியால் எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பது போன்ற விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். இவற்றையெல்லாம் பின்பற்ற வைக்கும்போதுதான் பெற்றோரின் முழு கடமையும் நிறைவு பெறும். சானிட்டரி நாப்கின் தேர்விலும் கவனம் செலுத்த வேண்டும். இப்போதெல்லாம் இயற்கை மூலிகை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் நாப்கின்கள் புழக்கத்திற்கு வந்திருக்கின்றன. அவை நச்சுக்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கின்றன. நாப்கின்கள் மட்டுமின்றி ‘மென்ஸ்ட்ரல் கப்’, ‘டேம்போன்’ உள்ளிட்டவையும் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்காதவற்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

    குடும்ப நலன் சார்ந்த முகாம்களில் பெற்றோர்களுக்கு வாழ்க்கை பாடம் கற்றுத்தரப் படுகிறது. அங்கு பிள்ளைகளை வளர்க்கும் விதம் பற்றியும் விளக்கி புரியவைக்கப்படுகிறது. ஆனாலும் டீன் ஏஜ் பெண்கள் மாத விடாய் காலத்தை எதிர்கொள்ளும் பக்குவம் பற்றி பெரும்பாலும் கற்றுத்தரப்படுவதில்லை. மாதவிடாய் சமயத்தில் பிள்ளைகளை அணுகும் முறை சில பெற்றோர்களிடம் மாறுபடும். மற்ற எல்லா நாட்களிலும் அக்கறை கொள்ளும் பெற்றோர், இப்போது மட்டும் ஏன் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள் என்ற குழப்பம் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும். அதனை தவிர்க்க வேண்டும். இயல்பாகவே அந்த நாட்களில் பெண்களின் மனதில் ஒருவித குற்ற உணர்வு வெளிப்படும். அது தேவையற்றது. இதுபற்றி ‘பேட்மேன்’ படம் மூலம் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நடிகர் அக்சய் குமார் சொல்கிறார்.

    ‘‘முதலில் இதைப்பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவை. ஆண் களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயம் என்று நினைக்க வேண்டாம். நிச்சயமாக சம்பந்தம் இருக்கிறது. நாம் எல்லோரும் உருவாக காரணமாக இருப்பது இந்த உதிரம்தான். தாயின் வயிற்றில் கருவிற்கு சக்தி கொடுப்பது, நோய் எதிர்ப்பு சக்தி கொடுப்பது இந்த உதிரம்தான். கரு வளர ஆதாரமாக இருப்பதும் இந்த உதிரம் தான். கரு உருவாகாதபோது அந்த உதிரம் வெளியேறி விடுகிறது. அந்த நாட்களில் ஆண்களும் பெண்களிடம் அணுசரனையாக நடந்து கொள்ள வேண்டும். இது அவர்களின் கடமை. பெண்களின் உடல் ஆரோக்கியம் மீது ஆண்களும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். தரமான சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதுகாப்பு, சவுகரியம், ஆரோக்கியம் பற்றியும் விளக்கி கூற வேண்டும்’’ என்கிறார்.
    Next Story
    ×