search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களே சமையலின் போது கண்கள் கவனம்...
    X
    பெண்களே சமையலின் போது கண்கள் கவனம்...

    பெண்களே சமையலின் போது கண்கள் கவனம்...

    சமைக்கும்போது அடுப்பில் இருந்து வெளியாகும் புகை, குழம்பு கொதிக்கும்போது வெளியாகும் நீராவி போன்றவை கண்களில் படுவதாலும் எரிச்சல் உண்டாகலாம்.
    நாம் புழங்கும் இடங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது சமையலறை. அதை, ‘ஒரு குட்டி தொழிற்சாலை’ என்று சொல்லலாம். கொதிக்கும் கலன்கள், எண்ணெய்களின் பயன்பாடு, கத்தி, முள்கரண்டி போன்ற கூர்மையான பொருட்கள் என அங்கே உள்ளவற்றை சரியாக கையாளாவிட்டால் கண்கள் பாதிக்கப்படலாம். சமையலறை உபகரணங்களால் கண்ணில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தால், தண்ணீர்விட்டு கழுவக் கூடாது. சுத்தமான துணியால் முகத்தை லேசாக மூடி, உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

    பாத்திரங்களை சுத்தப்படுத்தும் பொருட்கள் கண்களில்பட்டால் உடனே கண்களைக் கழுவ வேண்டும். இதை முதலுதவியாக செய்துவிட்டு, பிறகு கண் டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். மிளகுத்தூள், மசாலாத்தூள் போன்ற காரம் அதிகம் உள்ள மசாலா பொடிகளை பாத்திரத்தில் கொட்டும்போது அவை காற்றில் பறந்து கண்களில் படுவதாலோ, அவற்றை பயன்படுத்திவிட்டு அதே கைகளால் கண்களை தொடுவதாலோ கண்களில் எரிச்சல் உண்டாகும்.

    எனவே, இந்த பொடிகள் காற்றில் பறக்காத வண்ணம் பாத்திரத்தின் வாய்ப்பகுதிக்கு அருகே வைத்து கொட்ட வேண்டும். இந்த பொடிகளை பயன்படுத்தியதும் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

    தாளிக்கும்போதும், காய்கறிகளை வதக்கும்போதும் கண்களில் தெறிக்கலாம். எனவே, மிக நெருக்கமாக நிற்கக் கூடாது. அல்லது, நீளமான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. வெங்காயத்திலுள்ள ‘ஆலினேஸ்’ என்ற நொதி, நறுக்கும்போது சல்பினிக் அமிலமாக மாறுகிறது. எரிச்சல் கொடுக்கும் தன்மைகொண்ட இந்த அமிலம், காற்றில் ஆவியாகி கண்களில் படுவதால் கண்ணீர் வருகிறது. வெங்காயத்தை நறுக்குவதற்கு முன் குளிர்ந்த நீரில் போட்டுவைக்கலாம். அல்லது பத்து நிமிடங்களுக்கு ப்ரீஸரில் வைத்து நறுக்கினால் கண் எரிச்சல் ஏற்படுவது குறையும்.

    சமைக்கும்போது அடுப்பில் இருந்து வெளியாகும் புகை, குழம்பு கொதிக்கும்போது வெளியாகும் நீராவி போன்றவை கண்களில் படுவதாலும் எரிச்சல் உண்டாகலாம். எனவே, புகை வெளியேறும்விதமாக ‘எக்சாஸ்ட் பேன்’ அமைக்க வேண்டும். அல்லது, சமையலறை காற்றோட்டமாக இருக்குமாறு ஜன்னல்கள் இருக்க வேண்டும். கண்களில் அடிபட்டாலோ அல்லது கண்கள் சிவந்து போனாலோ சிலர் மருந்துக்கடையில் ஏதாவது சொட்டு மருந்தை வாங்கிப் பயன்படுத்துவார்கள். அது ஆபத்து.

    கண்களில் தீக்காயம்பட்டால் மஞ்சள்தூள், களிம்பு, பேனா மை போன்றவற்றை போடக் கூடாது. அவற்றை பயன்படுத்தினால் காயத்தின் தீவிரத்தை சரியாக தெரிந்துகொள்ள முடியாது. மேலும் அவற்றை சுத்தம் செய்வதிலும் சிரமம் ஏற்படும். தொற்றும் ஏற்படக்கூடும்.

    கண்களில் எண்ணெய் விடுவது, தாய்ப்பால் விடுவது போன்ற சுய மருத்துவத்தையும் செய்யக் கூடாது. முக்கியமாக கண்களில் வலி, எரிச்சல், சிவந்துபோவது, கண்களை திறந்து வைத்திருக்க முடியாதது, தொடர்ச்சியான உறுத்தல், இமைகளில் வீக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கண் டாக்டரை அணுகி பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
    Next Story
    ×