search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பெண்களே டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் கவனிக்க வேண்டியவை
    X

    பெண்களே டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் கவனிக்க வேண்டியவை

    • எந்த வங்கியும் தொலைபேசி மூலம் உங்களுடைய முக்கியமான விவரங்களை கேட்க மாட்டார்கள்.
    • உங்களுக்கு வங்கியில் இருந்து வரும் எஸ்எம்எஸ்யை தடை செய்யாதீர்கள்.

    டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் மக்கள் ஏமாந்து போவதற்கு மிக முக்கியமான காரணங்கள், அறியாமை, பேராசை, பயம் அல்லது பதட்டம் ஆகியவை தான் என்கிறார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் டிஜிட்டல் துறை பொது மேலாளர், லட்சுமி வெங்கடேஷ். மேலும் அவர்கள் கூறியது பின்வருமாறு:-

    நாம் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும்போது அதன் அடிப்படை என்ன, எந்தெந்த விஷயங்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், என்பது அவசியம்.

    உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்து உள்ளது, உங்களுக்கு வேண்டுமானால் நாங்கள் அனுப்பியுள்ள இணைப்பை நீங்கள் கிளிக் செய்து மேற்கொண்டு நாங்கள் கேட்கும் விவரங்களை கொடுத்தால், உங்களுக்கு அந்த பரிசு கிடைக்கும் என்று சொல்கிறார்கள் அல்லது வங்கியில் இருந்து அழைப்பது போலவும் அல்லது எலக்ட்ரிசிட்டி டிபார்ட்மெண்டில் இருந்து அழைப்பது போலவோ அழைத்து நீங்கள் இந்த விவரங்களை உடனடியாக கொடுக்காவிட்டால் உங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும் அல்லது உங்களுடைய வங்கி கணக்கு முடக்கப்படும் அல்லது உங்களுடைய ஏடிஎம் கார்டு முடக்கப்படும் என்பது போன்ற ஒரு பிம்பத்தை கட்டமைத்து நம்மை பயமுறுத்துகிறார்கள். இந்த சந்தர்ப்பங்களில் நாம் ஏமாந்து போகாமல் இருக்க வேண்டும்.

    டெபிட் கார்டின் பின்னாலேயே அதற்கு உண்டான பாஸ்வேர்டு என்ன என்று நாம் எழுதி வைக்கிறோம் அல்லது மொபைல் போனில் விபரங்களை சேமித்து வைக்கிறோம் அல்லது நண்பர்கள் யாருக்காவது நாம் வாட்ஸப் மூலமாக அனுப்புகிறோம். இது எல்லாமே தவறு. உங்கள் மொபைல் காணாமல் போய் தீயவர்கள் கைகளில் கிடைத்தால் இந்த விவரங்களை அவர்கள் மிகவும் எளிதாக தவறான வழியில் பிரயோகித்து உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து எல்லா பணத்தையும் எடுக்க முடியும்.

    முக்கியமாக பொதுவெளியில், ரயில்வே ஸ்டேஷன் அல்லது பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வைபை உபயோகித்து எந்த விதமான பணப்பரிவினை செய்யக்கூடாது. நீங்கள் அங்கே பொது வெளியில் உள்ள வைபை உபயோகித்து பொழுதுபோக்கு அம்சங்களை பார்க்கலாம். பொதுவெளியில் உள்ள வைபை மூலம் பணப்பரிவர்த்தனை செய்தால் அது உங்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடும். ஏனென்றால் பொது வெளியில் உங்களுடைய வங்கி கணக்கின் சம்பந்தப்பட்ட விவரங்கள் சேகரிக்கப் படலாம்.

    ஏடிஎம்மில் சென்று பணம் எடுக்கும் போதோ நீங்கள் ஒரு புதிய இடத்துக்கு சென்றாலோ அல்லது சுற்றுலா தலங்களுக்கு சென்றாலும், அந்த இடங்களில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டை க்ளோனிங் செய்யக்கூடிய ஸ்கின்னிங் என்று சொல்லப்படக்கூடிய ஒரு கருவியை பொருத்தி உங்களுடைய கார்டு விவரங்களை திருடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆகவே நீங்கள் சுற்றுலா தலங்களில் எப்போதெல்லாம் ஏடிஎம் கார்டு உபயோகிக்கிறீர்களோ உடனடியாக அதனுடைய பின் நம்பரை நீங்கள் மாற்றிவிட்டால் உங்களுக்கு பாதுகாப்பு அதிகமாகும்.

    உங்கள் கணக்கில் ஏதேனும் தவறான பரிவர்த்தனை யாராவது செய்தால் உங்களுக்கு எஸ்எம்எஸ் வங்கியில் இருந்து அனுப்பப்படும். நீங்கள் எஸ்எம்எஸ் வசதியை டிஆக்டிவேட் செய்து வைத்திருப்பீர்களே ஆனால் உங்களுக்கு அந்த எஸ்எம்எஸ் கிடைக்காது. பணம் பறிபோன பின்னர்தான் உங்களுக்கு அந்த விஷயம் தெரிய வரும். எனவே உங்களுக்கு வங்கியில் இருந்து வரும் எஸ்எம்எஸ்யை தடை செய்யாதீர்கள்.

    நீங்கள் பணம் பெறுவதற்கு எந்த காரணத்தை கொண்டும் யு பி ஐ பின் நம்பரை கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய பேர் பணம் பெறுவதற்காக இதை கேட்பார்கள் அதை கொடுத்தவுடன் உங்களுடைய பணம் பறிபோய்விடும்.

    உங்களுடைய மொபைல் தொலைந்து விட்டால் உடனடியாக உங்களுடைய வங்கி கணக்கையே நீங்கள் முடக்குவதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் கணக்கில் எந்த பரிவர்த்தனம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் உங்களுடைய இமெயில் முகவரி ஏதாவது இருந்தால் அந்த ஈமெயில் முகவரிக்கான பாஸ்வேர்டு உடனடியாக மாற்றிவிடவும்.

    எந்த வங்கியும் தொலைபேசி மூலம் உங்களுடைய முக்கியமான விவரங்களை கேட்க மாட்டார்கள். உங்களுக்கு 15 நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு கொடுக்காமல் எந்த வங்கியும் உங்களுடைய கணக்குகளையும் உங்களுடைய டெபிட் கார்டை முடக்க முடியாது.

    நீங்கள் டிஜிட்டல் வழியாக ஏமாற்றப்படும் போது உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு உடனடியாக அழைத்து உங்கள் புகாரை பதிவு செய்யலாம். அது தேசிய சைபர் கிரைம் தொடரில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு எவ்வளவு விரைவில் அந்த பணம் எங்கிருந்து எந்த கணக்கு சென்று அங்கிருந்து வேறு எந்த கணக்கு சென்றாலும் அந்த தொடரில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளையும் உடனடியாக அரசாங்கமே முடக்கிவிடும். என்று கூறி முடித்தார்.

    Next Story
    ×