என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னதங்கள்
    X

    குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னதங்கள்

    • குடும்பம் உருவாக்கி கொடுக்கும் நினைவுகளே உண்மையான செல்வமாகும்.
    • குடும்பத்தின் அன்பே வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதமாக அமையும்.

    குடும்பம் என்ற கட்டமைப்புதான் வாழ்வியலின் அடிப்படை அம்சங்களை கற்றுக்கொடுக்கிறது. வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதையும் தீர்மானிக்க செய்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஏதாவதொரு வகையில் வழிகாட்டியாக இருந்து வாழ்க்கையை செம்மையாக வாழ வழி வகை செய்வார்கள். எல்லா காலகட்டத்திலும் பக்கபலமாக இருக்கும் குடும்பத்தின் முக்கியத்துவத்தை சிலர் காலம் கடந்துதான் உணர்வார்கள். வாழ்க்கையின் அஸ்திவாரமாக அமையும் குடும்பத்தை பற்றிய உன்னத விஷயங்கள் பற்றி பார்ப்போம்.

    குடும்பம்தான் எல்லாமே

    குழந்தை பருவத்தில் குடும்பம்தான் உலகமாக அமைந்திருக்கும். வெளி உலக தொடர்பை ஏற்படுத்துவதற்கு முன்பு குடும்ப உறுப்பினர்களே எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கும் ஆசானாக இருப்பார்கள். ஆனால் இளமை பருவத்தில் குடும்பம் பற்றிய பார்வை மாறத்தொடங்கும். சிலர் குடும்பத்தை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கருதுவார்கள். சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் பயன்படுத்தும் இடமாகவே கருதுபவர்களும் உண்டு. ஆனால் படித்து முடித்து திருமணமாகி குடும்ப பந்தத்துக்குள் முழுமையாக இணையும்போதுதான் குடும்பம் பற்றிய புரிதல் முழுமையடையும். வாழ்க்கை என்ற வட்டம் குடும்பத்தை சூழ்ந்துதான் கட்டமைக்கப்பட்டிருப்பதை உணர்வார்கள். இன்பமோ, துன்பமோ எல்லா காலகட்டத்திலும் நமக்கு முதலில் ஆதரவாக இருப்பது குடும்பம்தான் என்பதை அறிவார்கள். தொழில், பணம், சாதனை எதுவும் குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் வசப்படாது.

    எதிர்காலத்தை கட்டமைக்கும்

    தாத்தா, பாட்டி சொல்லும் கதைகள், அவர்களின் கடந்த கால வாழ்க்கை நாம் வாழ்ந்திராத வாழ்க்கையை அறிந்து கொள்ள உதவிடும். அவர்களின் வாழ்க்கையை, அனுபவங்களை பின்பற்றி வாழ்வதற்கு வழிகாட்டும். குடும்பம்தான் ஆணி வேர். அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய இல்லற பாடங்களை நினைவூட்டும். குடும்ப பொறுப்புகள், கடமைகளை உணர வைக்கும். அவர்களின் எதிர்காலத்தை வலுவாக கட்டமைத்து கொடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர வைக்கும்.

    நினைவுகளே உண்மையான செல்வம்

    குடும்பம் உருவாக்கி கொடுக்கும் நினைவுகளே உண்மையான செல்வமாகும். குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து பேசிய தருணங்கள், சிரித்து மகிழ்ந்த சம்பவங்கள் என்றென்றும் நினைவை விட்டு மறையாது. காலங்கள் கடந்தும் நினைவூட்டி மகிழ வைக்கும். இன்பமோ, துயரமோ எல்லா அனுபவங்களும் வாழ்நாள் முழுவதும் நம்மோடு இருக்கும். நினைவுகள்தான் குடும்பத்தினர் ஒவ்வொருவருடனும் நம்மை இணைக்கும் பாலமாக அமையும். செல்வம் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    ஆதரவளிக்கும் இடம்

    குடும்பத்தினரில் சிலர் அதிகம் பேச மாட்டார்கள். ஆனால் மற்ற உறுப்பினர்கள் தங்களுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும், தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். குடும்பத்தினருடன் இருப்பதுதான் அவர்களை நிம்மதி அடைய செய்யும். அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்த தயங்குவார்கள். அவர்களுக்கு ஆதரவளிக்கும் இடமாக குடும்பமே என்றென்றும் விளங்கும்.

    ஆரம்பமும்.. முடிவும்..

    பள்ளி, கல்லூரி படிப்புகளின்போது நண்பர்கள் மாறலாம். வேலைக்கு செல்லும் இடத்தில் புதிய நண்பர்கள் கிடைக்கலாம். தொழில் நிமித்தமாக அடிக்கடி நகரத்தில் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ள நேரிடலாம். நட்பும், வசதி வாய்ப்பும் வாழ்க்கை சூழலை மாற்றலாம். ஆனால் குடும்பம் என்றென்றும் நிலையானது. வாழ்க்கையை ஆரம்பிக்கும் இடமும், இறுதி காலத்தை நிலையாக ஓரிடத்தில் கழிக்க சரணடையும் இடமும் குடும்பமாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் எவ்வளவு தூரம் சென்றாலும், எல்லை கடந்து பயணித்தாலும் இறுதியில் மனம் குடும்பத்தையே நாடி வரும்.

    வழிகாட்டும் திசைகாட்டி

    ஏதேனும் மன குழப்பத்தில் இருக்கும்போதோ, தடுமாற்றம் அடையும்போதோ பெற்றோர் கற்றுக்கொடுத்த விஷயங்கள் நம்மை வழிநடத்தும். தோல்வியை சந்தித்தால் குடும்பம் ஆதரவுக்கரம் நீட்டி அதிலிருந்து மீள வழிகாட்டும். எங்கு சென்றாலும் திசைகாட்டியாய் பின்தொடர்ந்து வாழ்க்கையை சிறப்பாக வாழ வழிகாட்டும். குடும்பத்தினரின் அன்பும், நம்பிக்கையும் நம்மை முன்னேற்றும்.

    ஆதாரம்

    குடும்பம் என்பது வாழ்க்கையின் இயற்கையான ஆதாரம். சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குடும்ப பந்தம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. அன்னிய எண்ணத்துடன் அணுகாது. அரவணைத்து செல்லும்.

    வீட்டின் இதயம்

    சில வீடுகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் உள்ளே நுழைந்தால் வெறுமையாக தோன்றும். அங்கு வசிப்பவர்கள் தனிமை சூழலை அனுபவிப்பவர்களாக இருப்பார்கள். அதற்கு மாறாக சிறிய வீடாக இருக்கும். அங்கு வசிப்பவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள். அந்த வீடு அன்பு நிறைந்ததாக உணரப்படும். வீட்டின் இதயம் குடும்பம்தான். ஒரு வீட்டை குடும்பமாக உணர வைப்பது அங்கு வசிக்கும் மனிதர்களும், அவர்கள் காட்டும் அன்பும்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    ஆசீர்வாதம்

    குடும்பத்தின் அன்பே வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதமாக அமையும். குடும்ப அன்பு தான் மற்றவர்களையும் அன்புடன் நேசிக்க கற்றுத்தரும். எத்தகைய நெருக்கடியான சூழலையும் சமாளிக்க மன தைரியத்தை கற்றுக்கொடுக்கும்.

    இணைப்பு

    குடும்பம் என்பது மரக்கிளைகள் போன்றது. சகோதர, சகோதரிகள் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். ஆனால் ஒருவரையொருவர் சந்திக்கும்போது இணக்கத்தையும், அன்பையும் உணர வைக்கும். அந்த நெருக்கம்தான் குடும்ப பந்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. வெகு தூரத்தில் வசித்தாலும் குடும்பம் நம்மை எப்போதும் ஒன்றிணைக்கும் பாலமாக அமையும்.

    Next Story
    ×