search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    தற்போதுள்ள பெண்கள் விரும்பும் 1 கிராம் தங்க நகைகள்
    X

    தற்போதுள்ள பெண்கள் விரும்பும் 1 கிராம் தங்க நகைகள்

    • இவ்வகை நகைகள் நீண்ட நாட்களுக்கு புதிது போலவே இருக்கும்.
    • அனைத்து வகையான நகைகளும் இந்த முறையில் தயாரிக்கப்படுகின்றன.

    தங்கத்தின் மீது யாருக்குத் தான் ஆசை இருக்காது? ஆனால், எல்லா காலங்களிலும் தொடர்ந்து தங்க ஆபரணங்களையே பயன்படுத்த முடியுமா? தொடர்ந்து பயன்படுத்துவதால், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தங்க வளையல் வளைந்து நெளிந்து தேய்ந்து போகிறது. ஒவ்வொரு முறையும் வளையல் மாற்றும் போது செய்கூலி, சேதாரம் எல்லாம் போட்டு கூட்டி கழித்து வயிற்றில் புளியைக் கரைப்பார்கள். அதனால், அன்றாட பயன்பாட்டிற்காக பலரும் இப்போது, தங்க நகைகளுக்கு மாற்றாக பெண்டட்டுகள் போன்ற செயற்கை நகைகள் பக்கம் திரும்பி விட்டனர்.

    தங்கத்தின் விலை அதிகரித்து வரும் இவ்வேளையில், பல பெண்களின் விருப்பமாக இருப்பது 1 கிராம் தங்க நகைகள். பித்தளை, தாமிரம் மற்றும் உலோகக் கலவைகளின் மேல் 1 கிராம் தங்கத்தை மேல் பூச்சாகப் பூசி இவை தயாரிக்கப்படுகின்றன.

    தங்க நகைகள் போலவே பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் கண்களைக் கவரும் 1 கிராம் தங்க நகைகள், விலை உயர்ந்த நகைகளுக்குச் சிறந்த மாற்றாகும். இவ்வகை நகைகள் நீண்ட நாட்களுக்கு புதிது போலவே இருக்கும். தினசரி அணியக்கூடிய எளிமையான வடிவமைப்பு முதல் மணப்பெண்களுக்கான ஆடம்பரமான டிசைன்கள் வரை, கம்மல், வளையல், செயின், ஆரம், நெக்லஸ், மோதிரம், கொலுசு என அனைத்து வகையான நகைகளும் இந்த முறையில் தயாரிக்கப்படுகின்றன.

    ஒன் கிராம் கோல்டு என்று விற்கப்படும் நகைகளில் மற்ற உலோகத்தின் மேல் தங்க நிறத்தில் முலாம் பூசி விற்கிறார்கள். சருமத்தின் மேல் இருக்கும் வியர்வை மற்றும் அழுக்குகள் மீது இந்த உலோகம் உரசும் போது ஏற்படும் எதிர்வினையாலும் ஒவ்வாமை ஏற்படக்கூடும். உலோக ஒவ்வாமை இருப்பவர்கள் கூடியவரை செயற்கை நகைகள் அணிவதை தவிர்க்கலாம்.

    அப்படியும் விருந்து, விசேஷங்களில், உறவினர் வீடுகளுக்கு செல்ல நேர்கையில் என்று செயற்கை நகைகளை அணிந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் சில இருக்கின்றன. இவற்றை கடைபிடித்தால், சருமத்தைப் பாதுகாக்கலாம்.

    செயற்கை நகைகளை போட்டுக் கொண்டு வெளியில் சென்று விட்டு, வீட்டுக்கு வந்தவுடன் நன்றாக சுத்தம் செய்து உலர வைத்து, காட்டன் உள்ள பெட்டிகளில் காற்றுப் புகாமல் இறுக்கமாக மூடி வைத்துவிட வேண்டும்.

    தங்கமுலாம் பூசிய நகைகள் அணிந்துள்ள சருமப் பகுதியில் பர்ஃப்யூம் உபயோகிக்க வேண்டாம். செயற்கை நகைகளை அணிவதற்கு முன் அவை சருமத்தில் படும் இடங்களில் ஈரம் இல்லாமல், துடைத்து உலர வைத்த பின் அணிவது நல்லது.

    Next Story
    ×