என் மலர்
சமையல்

தீபாவளி பலகாரம் முருங்கை லட்டு
- வித்தியாசமான முருங்கை லட்டு.
- தீபாவளி என்றாலே பல வகையான பலகாரங்கள் செய்வது வழக்கம்.
நாம் நமது வீடுகளில் தீபாவளி என்றாலே பல வகையான பலகாரங்கள் செய்வது வழக்கம். அந்த வகையில், இனிப்பு, காரம் என பல வகையான பலகாரங்கள் நமது தீபாவளி கொண்டாட்டத்தில் இடம் பெரும். அந்த வகையில் நாம் இந்த தீபாவளிக்கு வித்தியாசமான முருங்கைகீரை பொடியை வைத்து லட்டு செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1/2 கப்
முருங்கைக்கீரை பொடி - 1/2 கப்
உலர்ந்த அத்திப்பழம் - 6
உலர்ந்த பேரீச்சம் பழம் (விதை நீக்கியது) -10
உலர் திராட்சை - 1/4 கப்
முந்திரி - 1/4 கப்
பாதாம் - 1/4 கப்
பிஸ்தா - 1/4 கப்
உலர்ந்த தேங்காய் துருவல் - 4 கப்
வெல்லம் (பொடித்தது) - 4 கப்
ஏலக்காய் பொடி - ஒரு டீஸ்பூன்
உலர்ந்த தேங்காய் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
உலர்ந்த அத்திப்பழம் மற்றும் பேரிச்சம் பழங்களை மிதமான சூடுள்ள தண்ணீரில் போட்டு 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை சூடுபடுத்தி, அதில் கேழ்வரகு மாவைக் கொட்டி பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் வறுக்க வேண்டும். பின்னர் அதில் முருங்கைக்கீரை பொடியை சேர்த்து மீண்டும் வறுக்கவும். பச்சை வாசனை போன பிறகு அதை அடுப்பில் இருந்து இறக்கி மற்றொரு பாத்திரத்தில் கொட்டி ஆற வைக்க வேண்டும்.
அதே வாணலியில் முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை கொட்டி மிதமான தீயில் வறுக்க வேண்டும். பின்னர் அதில் உலர்ந்த தேங்காய் துருவலைக் கொட்டி கிளற வேண்டும். பச்சை வாசனை போனதும் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.
அதன் பிறகு இவற்றை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ள வேண்டும். ஊறவைத்த அத்தி மற்றும் பேரீச்சம் பழங்களுடன், உலர் திராட்சை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் விழுதாக அரைக்க வேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்ற வேண்டும். அது சூடானதும் அரைத்து வைத்திருக்கும் உலர் பழங்களின் விழுதை அதில் போட்டு குறைவான தீயில் கிளற வேண்டும். விழுது வாணலியில் ஒட்டி வரும் சமயத்தில், பொடித்து வைத்திருக்கும் முந்திரி கலவையை அதில் போட்டு நன்றாகக் கிளறவும்.
இப்போது அதில் கேழ்வரகு மற்றும் முருங்கைக் கீரை பொடி கலவையைக் கொட்டி நன்றாகக் கலக்க வேண்டும். அதில் மீதம் இருக்கும் நெய்யை ஊற்றிக் கிளறவும். தேவையான அளவு வெல்லத்தை இந்த கலவையில் சேர்க்கவும். வெல்லம் நன்றாகக் கரைந்து கலவையுடன் சேர்ந்து வந்தபிறகு அடுப்பை அணைக்கவும்.
இந்த கலவை மிதமான சூட்டில் இருக்கும்போதே லட்டுகளாக பிடித்து, அவற்றை உலர்ந்த தேங்காய் பொடியில் போட்டு மென்மையாக புரட்டி எடுக்கவும். சுவையான முருங்கை லட்டு தயார்.






