என் மலர்
சமையல்

சுவையான செட்டிநாடு ஸ்டைல் மீல் மேக்கர் புட்டு
- மீல் மேக்கர் புட்டு சாம்பார் சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்.
- உங்கள் வீட்டில் அடிக்கடி மீல் மேக்கரை சமைப்பீர்களா?
உங்கள் வீட்டில் அடிக்கடி மீல் மேக்கரை சமைப்பீர்களா? இதுவரை நீங்கள் மீல் மேக்கரை பிரியாணியிலும், மசாலா செய்தும் சாப்பிட்டிருக்கலாம். ஆனால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு செட்டிநாடு ஸ்டைலில் அட்டகாசமான சுவையில் புட்டு செய்யலாம் தெரியுமா? இந்த மீல் மேக்கர் புட்டு சாம்பார் சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த புட்டு செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
மீல் மேக்கர் - 20
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2 (இரு துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
எண்ணெய் - 4 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
மசாலா அரைப்பதற்கு:
துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
சோம்பு - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு, உப்பு சேர்த்து, 10 நிமிடம் கொதிக்க வைத்து பின் நீரை வடிகட்டிவிட்டு, மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு, 2 நொடிகள் ஒருமுறை அரைத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் மிக்சர் ஜாரில், தேங்காய், பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, இஞ்சி-பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, சிறிது உப்பு தூவி, குறைவான தீயில் வைத்து சில நிமிடங்கள் கிளறி விட வேண்டும். அடுத்து அரைத்த மீல் மேக்கரை சேர்த்து, மசாலாவுடன் மீல் மேக்கர் ஒன்று சேரும் வரை நன்கு கிளறி, இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைலில் மீல் மேக்கர் புட்டு தயார்.






