என் மலர்tooltip icon

    சமையல்

    மழைக்காலத்துக்கு ஏற்ற `கிரிஸ்பி பைங்கன்
    X

    மழைக்காலத்துக்கு ஏற்ற `கிரிஸ்பி பைங்கன்'

    • மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவதற்கு ஏற்றது.
    • தேநீருடன் சேர்த்தும் சுவைக்கலாம்.

    `ஜில்' என்று மழைச்சாரல் வீசும் மாலை நேரங்களில், சிறுவர் முதல் பெரியவர் வரை சூடான தின்பண்டங்களை சாப்பிட விரும்புவார்கள். வட மாநிலங்களில் பிரபலமான 'கிரிஸ்பி பைங்கன்' மழைக்காலத்தில் மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவதற்கு ஏற்றதாக இருக்கும். இதை தேநீருடன் சேர்த்தும் சுவைக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    இளம்பச்சை நிற கத்தரிக்காய் (பெரியது) - 2

    பச்சை மிளகாய் - 2

    இஞ்சி - பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

    காஷ்மீரி மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 4 டீஸ்பூன்

    கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

    சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

    ரவை - 1 கப்

    எலுமிச்சம் பழச்சாறு- 1 டீஸ்பூன்

    கொத்தமல்லித்தழை- கைப்பிடி

    உப்பு - தேவைக்கு

    எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    கத்தரிக்காய்களை சுத்தம் செய்த பின்பு சற்றே தடிமனான வில்லைகளாக அவற்றை நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும். பச்சை மிளகாய்களை பொடிதாக நறுக்க வேண்டும்.

    இப்போது இஞ்சி-பூண்டு விழுது, காஷ்மீரி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், சாம்பார் பொடி, உப்பு, பச்சை மிளகாய், எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து பசைபோல தயாரிக்கவும். இந்த மசாலாவை கத்தரிக்காய்களின் இரண்டு புறமும் நன்றாக தடவ வேண்டும். பின்பு அவற்றை 10 நிமிடங்களுக்கு அப்படியே வைக்க வேண்டும்.

    ஒரு தட்டில் ரவையைக் கொட்டி, அதனோடு 2 சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும். பின்பு மசாலா பூசிய கத்தரிக்காய்களை ரவையில் போட்டு புரட்டிக் கொள்ள வேண்டும்.

    நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து. அதில் பரவலாக 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். அது சூடானதும் கத்தரிக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக அதன்மீது வைத்து இருபுறமும் மொறுமொறுப்பாக வருமாறு வறுக்க வேண்டும். பொடிதாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை அதன் மீது தூவி சூடாக பரிமாறலாம்.

    Next Story
    ×