search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்களும்
    X
    அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்களும்

    அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்களும்... ஏற்படுத்தும் பாதிப்புகளும்...

    சில வியாதிகள் அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றுகின்றன. அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்கள் குறித்தும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் பார்ப்போம்.
    சளி, இருமல், காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை கொரோனா நோயின் ஆரம்பகட்ட அறிகுறிகளாக இருக்கின்றன. இந்த அறிகுறிகள் இல்லாமலேயே சிலர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதுபோலவே சில வியாதிகள் அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றுகின்றன. ஆரம்பக்கட்டத்தில் கண்டறிய முடியாமல் இறுதிகட்டத்திற்கு முந்தைய நிலையில்தான் நோயின் வீரியம் வெளிப்பட தொடங்கும். எந்தவியாதியாக இருந்தாலும் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்தால்தான் தீவிர சிகிச்சை அளித்து குணப்படுத்தமுடியும். இல்லாவிட்டால் கடும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டால்தான் நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் நோய்கள் குறித்தும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் பார்ப்போம்.

    நீரிழிவு நோய்: ‘சைலெண்ட் கில்லர்’ எனப்படும் அமைதியான கொலையாளியாக நீரிழிவு நோய் கருதப்படுகிறது. ஏனெனில் நீரிழிவு நோய் ஒருவருக்கு இருப்பதை சுலபமாக கண்டறிவது கடினம். அதிலும் டைப்-2 நீரிழிவு பாதிப்பு என்றால் ஆரம்பகட்டத்தில் எந்த அறிகுறிகளும் வெளிப்படாது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நீரிழிவு நோய் இருப்பதற்கான அறிகுறிகளை கண்டறியமுடியாமலே போய்விடும். இறுதிகட்டத்தில் அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். சில சமயங்களில் அந்த அறிகுறிகளும் தெளிவற்றதாக அமைந்துவிடும்.

    கணைய புற்றுநோய்: புற்றுநோயின் கொடிய வடிவங்களில் ஒன்றாக கணைய புற்றுநோய் அமைந்திருக்கிறது. இறுதிகட்டத்தை நெருங்கும் வரை எந்த அறிகுறிகளும் தெரியாது. அதன் பிறகுதான் மஞ்சள் காமாலை, வயிற்றின் மேல்பகுதியில் வலி, எதிர்பாராதவிதமாக அதிக எடை இழப்பு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். அப்போதும் உடனே சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால் கடும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.

    ஆஸ்டியோபோரோசிஸ்: எலும்பு முறிவு ஏற்படுவதற்கான ஆபத்தை உருவாக்கும். ஆனால் ஆரம்பக்கட்டத்தில் எந்த அறிகுறிகளும் தெரியாது. எலும்புகளில் லேசாக பாதிப்பை ஏற்படுத்தி படிப்படியாக எலும்புகள் செயல்பட முடியாத நிலைக்கு ஆளாகிவிடும். நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றமுடியாத நிலைக்கு ஆளாக நேரும்.

    மாரடைப்பு: சிலருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்படும். இதயத்தின் ஒரு பகுதிக்கு இரத்தம் செல்லமுடியாமல் தடைபடும்போது ‘சைலண்ட் ஹார்ட் அட்டாக்’ எனப்படும் மாரடைப்பு ஏற்படும். மாரடைப்பு ஏற்படப்போகிறது என்பதை சம்பந்தப்பட்டவரால் உணரமுடியாது. எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. சாதாரண மார்பு வலி, மயக்கம், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் எப்போதாவது வெளிப்படக்கூடும்.

    சிறுநீரக நோய்கள்: ஆரம்பகால கட்டத்தில் எந்த அறிகுறிகளையும் யூகிக்க முடியாது. பெரும்பாலும் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் சிறுநீரக நோய் பாதிப்புக்கும் ஆளாகுவார்கள். ஆதலால் அவர்கள் ‘யூரின் மைக்ரோ அல்புமின்’ பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது. அந்த பரிசோதனை முடிவுதான் நோய் பாதிப்பை கண்டறிய உதவும்.

    எச்.ஐ.வி.: ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் வெளிப்படாது. நோய் எதிர்ப்பு குறைபாடு தன்மையை உருவாக்கும் வைரஸ் இதற்கு மூலகாரணமாக இருக்கிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு பிறகு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். ஆனால் பெரும்பாலும் அவை பிற நோய்களுக்கான அறிகுறியாகவே அமைந்துவிடும். அதனால் எளிதில் கண்டறிவது கடினம்.
    Next Story
    ×