search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தரமான ‘கூலிங் கிளாஸ்’ செய்யும் வேலை என்ன?
    X
    தரமான ‘கூலிங் கிளாஸ்’ செய்யும் வேலை என்ன?

    தரமான ‘கூலிங் கிளாஸ்’ செய்யும் வேலை என்ன?

    தரமற்ற கண்ணாடிகளை வாங்கி அணிவது கண்ணாடி அணிவதன் நோக்கத்தையே சிதைத்துவிடுகிறது. தொடர்ந்து தரமற்ற கண்ணாடிகளை பயன்படுத்தினால் பார்வை குறைபாடு ஏற்படலாம்.
    வெப்பமண்டல பகுதியான நமது நாட்டில், அடிக்கடி வெளியில் செல்பவர்கள் அவதிப்படுவது கண் எரிச்சலால் தான். இதற்கு கைகொடுப்பவை ‘கூலிங் கிளாஸ்’ என்று சொல்லப்படும் குளிர் கண்ணாடிகள். பலருக்கும் கண்ணாடி தவிர்க்க முடியாததாகிவிட்டது. பார்வை குறைபாடு இல்லாதவர்கள்கூட ஸ்டைலுக்காகவும் குளிர்ச்சிக்காகவும் கண்ணாடியை பயன்படுத்துகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகளில் பெரும்பாலோர் கண்ணாடி பயன்படுத்துகின்றனர்.

    வெயிலில் இருந்து மட்டுமல்லாமல், தூசியிலிருந்து கண்களை பாதுகாப்பதும் பெரிய சவால்தான். இதற்காக தரமில்லாத கண்ணாடிகளை பயன்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக பார்வையை பறிகொடுத்துக் கொண்டிருப்பதை பலரும் உணர்வதில்லை. பாலிதீன் பைகளில் சுற்றி, அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் வண்ண வண்ண கண்ணாடிகளை சாலையோர கடைகளில் பார்க்க முடியும். அங்கே குறைந்த விலைக்கு பலரும் கண்ணாடிகளை வாங்கி விடுகிறோம். அதன் ஆயுள் சில மாதங்கள்தான் என்றாலும், விதவிதமான கண்ணாடிகளை அணிந்துகொள்வதில் பலருக்கும் ஆர்வம் உண்டு.

    இந்த கண்ணாடிகளில் ஏதோ ஒரு தயாரிப்பு குறைபாடு இருக்கும். பெரும்பாலான நேரம் அது கண்ணாடியாகவே இருக்காது, பிளாஸ்டிக் அல்லது ஒரு வகை பைபராக இருக்கும். ஆனால், அதை யாரும் பொருட்படுத்துவதே இல்லை. கண்ணாடி நிறுவனங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்யும் கடைகளை தவிர, பெரும்பாலான கடைகளில் இந்த குறைந்த விலை கண்ணாடிகள்தான் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன.

    தரமற்ற கண்ணாடிகளை வாங்கி அணிவது கண்ணாடி அணிவதன் நோக்கத்தையே சிதைத்துவிடுகிறது. தொடர்ந்து தரமற்ற கண்ணாடிகளை பயன்படுத்தினால் பார்வை குறைபாடு ஏற்படலாம். தரமான கண்ணாடிகளிலும் கீறல், சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டால் உடனடியாக கண்ணாடியை மாற்றிவிட வேண்டும். இல்லையென்றால், கூர்ந்து பார்த்து கண்ணுக்கு அழுத்தம் தந்து பார்வை குறைபாடு ஏற்பட நேரிடலாம். பார்வை குறைபாட்டுக்காக கண்ணாடி அணிந்தவர்களுக்கு பாதிப்பு மேலும் அதிகமாகும். இதை தவிர்க்க கண்ணாடியை உறையில் வைத்து பாதுகாக்க வேண்டும்.

    அதேபோல, மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளாமல் யாரும் கண்ணாடி அணியக்கூடாது. பெரும்பாலோர் பாதிப்பு மோசமான பிறகே, கண் டாக்டரிடம் செல்கின்றனர். கண் பாதுகாப்பை குழந்தை பருவத்திலேயே தொடங்க வேண்டும். எழுத்துகளை குழந்தைகள் நன்கு வாசிக்க ஆரம்பிக்கும்போது, கண் பரிசோதனை செய்ய வேண்டும். அதன்பிறகு, குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் அனைவரும் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நல்ல நிலையில் குழந்தை பிறந்தாலும் கண் பரிசோதனை அவசியம். அதேபோல, தினமும் கண்ணுக்கு 8 மணி நேர ஓய்வு கொடுப்பதும் மிக அவசியம்.

    சூரிய வெளிச்சத்தில் இருந்தும், கண் எரிச்சலில் இருந்தும் பாதுகாக்கத்தான் குளிர் கண்ணாடிகளை அணிவதாக நினைக்கிறோம். ஆனால், தரமான குளிர் கண்ணாடிகள் செய்யும் வேலையே வேறு. அவை, புறஊதா எனப்படும் யு.வி. கதிர்களில் இருந்து பாதுகாக்கின்றன. கடுமையான வெளிச்சத்தில் இருந்து பாதுகாக்கின்றன. கண்ணை கூசும் வெளிச்சத்தை தடுக்கின்றன. பார்வையை பாதிக்கும் சில ஒளி அலைவரிசைகளை கட்டுப்படுத்துகின்றன. இந்த பணிகள் எதையும் குறைந்த விலையில் வாங்கும் கண்ணாடிகள் செய்வதில்லை.
    Next Story
    ×